டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

சாலையில் கிடந்த 20 பவுன் நகை! காவல் துறையிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு குவியும் பாராட்டுகள்!

திருவாரூரில் சாலையில் கண்டெடுத்த 20 பவுன் நகையை காவல் துறையிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் துரைக்கு குவியும் பாராட்டுகள்...

News image
Updated On :9 பிப்ரவரி 2026, 3:20 pm

இணையதளச் செய்திப் பிரிவு

திருவாரூரில் சாலையில் கண்டெடுத்த 20 பவுன் நகையை காவல் துறையிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் துரைக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

ஏழ்மையிலும் நேர்மையை கடைப்பிடித்த தூய்மைப் பணியாளர் துரையை குடும்பத்துடன் அழைத்துப் பொன்னாடை போர்த்தி காவல் துறையினர் பாராட்டினர்.

சென்னை கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர், திருவாரூரில் உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக மனைவி முத்துலட்சுமி உள்பட 6 பேருடன் சென்றுள்ளார்.

ராதாகிருஷ்ணன் மகளுக்கு மார்ச் 8 ஆம் தேதி திருத்துறைப் பூண்டியில் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. திருமணத்துக்காக வாங்கியிருந்த 20 பவுன் நகைகள் உள்பட வெள்ளிப் பொருள்கள் சிலவற்றை திருத்துறைப்பூண்டியில் உள்ள உறவினர் வீட்டில் கொடுத்துவைக்க முடிவு செய்து, அவற்றை தனி பையில் வைத்து எடுத்துச் சென்றுள்ளனர்.

திருவாரூரில் இருந்து ஆலத்தம்பாடிக்கு ஆட்டோவில் சென்றுக்கொண்டிருக்கும்போது பின்புறம் வைக்கப்பட்டிருந்த நகைப்பை சாலையில் விழுந்துள்ளது. ஆட்டோவில் இருந்து இறங்கி பல இடங்களில் தேடிய பிறகு காவல் நிலையத்தில் ராதாகிருஷ்ணன் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில், விருப்பாச்சி சாலையில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த நகராட்சி தூய்மைப் பணியாளர் துரை, சாலையில் கிடந்த பையை எடுத்துள்ளார். அதில் நகைகள் இருந்ததும் நகராட்சி அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துவிட்டு, காவல் நிலையத்தில் நகைப்பையை ஒப்படைத்துள்ளார்.

பையில் இருந்த தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள்

பையில் இருந்த தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள்

காவல் நிலையத்தில் நகை காணாமல்போனது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டிருந்ததால், நகை உரிமையாளர்களை அழைத்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில், நகைப்பை ராதாகிருஷ்ணன் குடும்பத்திற்கு சொந்தமானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகளின் திருமணத்துக்கு வாங்கி வைத்திருந்த நகைகளை தொலைத்துவிட்டு சோகத்தில்இருந்த குடும்பத்தினர், நகை பையை மீட்டுக்கொடுத்த தூய்மைப் பணியாளரை வணங்கி, கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். இந்த விடியோ சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

ஏழ்மையில் இருந்தும் சாலையில் கிடந்த நகையை உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் காவல் துறையிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் துரையின் நேர்மையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

திருவாரூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் சந்தானமேரி, துரையை குடும்பத்துடன் அழைத்து மாலை அணிவித்து கெளரவித்து பொன்னாடை போர்த்தி பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.