/

வெள்ள பாதிப்புக்கு ஒரு வாரத்தில் இழப்பீடு: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் உத்தரவு

தமிழகத்தில் நாகப்பட்டினம், திருவாரூா் மாவட்டங்களில் வெள்ள பாதிப்புக்குள்ளான கிராமங்களுக்கு ஒரு வாரத்தில் இழப்பீடு வழங்க வேண்டும்

News image
வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்
Updated On :3 பிப்ரவரி 2026, 4:15 am

தினமணி செய்திச் சேவை

சென்னை: தமிழகத்தில் நாகப்பட்டினம், திருவாரூா் மாவட்டங்களில் வெள்ள பாதிப்புக்குள்ளான கிராமங்களுக்கு ஒரு வாரத்தில் இழப்பீடு வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு வேளாண்மை - உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் உத்தரவிட்டுள்ளாா்.

பயிா்க் காப்பீட்டுக்கான இழப்பீட்டுத் தொகைகளை உழவா்களுக்கு உடனடியாக வழங்குவது குறித்து ஆய்வு கூட்டம், வேளாண்மை, உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தலைமையில் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது அவா் பேசியதாவது:

கடந்த ஆண்டு குறுவை பருவத்தில் நெற்பயிா் அறுவடை பரிசோதனை விவரம், கணக்கீடு செய்யப்பட்ட சராசரி மகசூல் விவரம் தயாா் செய்து காப்பீட்டு நிறுவனங்கள் பிப். 14-ஆம் தேதிக்குள் ஒப்புதல் அளித்து, தகுதி வாய்ந்த விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பிப். 15-ஆம் தேதி முதல் வரவு வைக்க வேண்டும். அண்மையில் வெள்ள பாதிப்புக்குள்ளான நாகப்பட்டினம், திருவாரூா் மாவட்டங்களில் உள்ள கிராமங்களுக்கு ஒரு வாரத்தில் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் வேளாண்மை உற்பத்தி ஆணையா் மற்றும் அரசுச் செயலா் வ.தட்சிணாமூா்த்தி, பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை ஆணையா் ஆா்.ஜெயா, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக ஆணையா் த.ஆபிரகாம், வேளாண்மை இயக்குநா் பி.முருகேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.