/

தெருநாய்களுக்கு உணவளிக்கும் தனியார் நிறுவன ஊழியர்!

சேலம் மாவட்டம் வாழப்பாடியில், மக்களால்  கைவிடப்பட்டு மயானத்தில் தஞ்சமடைந்துள்ள தெருநாய்களுக்கு, தனியார் நிறுவனம் ஊழியர் ஒருவர் தினம்தோறும்  உணவாக பால்சாதம் கொடுத்து பராமரித்து வருகிறார். 

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 6:46 am

பெரியார் மன்னன்

சேலம் மாவட்டம் வாழப்பாடியில், மக்களால்  கைவிடப்பட்டு மயானத்தில் தஞ்சமடைந்துள்ள தெருநாய்களுக்கு, தனியார் நிறுவனம் ஊழியர் ஒருவர் தினம்தோறும்  உணவாக பால்சாதம் கொடுத்து பராமரித்து வருகிறார். 

மனிதநேயத்திற்கு எடுத்துக்காட்டான இவருக்கு, பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி கிழக்குக்காடு கணபதி கவுண்டர் தெருவை சேர்ந்தவர் ரவிகாந்த் (52). தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். 

Story image

விலங்குகள், பறவைகள் மீது அதீத பற்று கொண்ட இவர். தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் இணைந்து, வீட்டில் பானைகள், செயற்கை கூடுகள் அமைத்து பல ஆண்டுகளாக சிட்டுக்குருவிகளுக்கு வாழிடம் அமைத்து கொடுத்து வருகிறார். கோடைக் காலங்களில் குருவிகளுக்கு, தண்ணீர் மற்றும் உணவு தானியங்கள் வைத்து வருகிறார்.

வாழப்பாடி பகுதியில் ஏராளமாக சுற்றித்திரியும், நாய்க்குட்டிகளை, குறிப்பாக பெண் நாய்க்குட்டிகளை, வாழப்பாடி கிழக்குக்காடு மயானம் அருகே கொண்டு வந்து விட்டுச் செல்கின்றனர். இப்படி ‌கைவிடப்பட்ட ஏராளமான நாய்க்குட்டிகள் இப்பகுதியிலேயே தங்கி உணவின்றி தவித்து வருகின்றன.

Story image

இதனைக் கண்ட ரவிகாந்த் 2 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியில் இருக்கும் நாய்க்குட்டிகளுக்குத் தினம்தோறும் வீட்டிலிருந்து சாதம் சமைத்து கொண்டுவந்து பால் வாங்கி பால் சாதம் தயாரித்து நாய்க்குட்டிகளுக்கு தட்டில் வைத்து உணவளித்து வருகிறார். இதனைக் கண்ட பலரும் இவருக்குப் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Story image

இதுகுறித்து இவரிடம் கேட்டதற்கு,  

'தெரு நாய்கள் குட்டி போடும்போது ஆண் குட்டிகளை எடுத்துச்செல்லும் பொதுமக்கள் பெண் குட்டிகளை கொண்டு வந்து மயானத்தில் விட்டுச் சென்று விடுகின்றனர். இந்த குட்டிகள் உணவின்றி தவித்து வருகின்றன. இதனால், இந்த நாய்க்குட்டிகளுக்கு உணவளிக்க வேண்டும் என மனதில் தோன்றியது. 2 ஆண்டுகளாகத் தொடர்ந்து உணவளித்து வருகிறேன். இது எனக்கு மன நிறைவைத் தருகிறது' என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.