/

இலையுதிர்ந்த ஒரே வாரத்தில் துளிர்க்கும் 200 ஆண்டு அத்தி மரம்!

200ஆண்டு முதிர்ந்த வெள்ளை அத்திமரம், இலையுதிர்ந்த ஒரே வாரத்தில் துளிர்த்து தழைத்து நிழல் கொடுத்து வருவதால், இந்த அதிசய மரம் தெய்வீகத் தன்மை கொண்டதாக கருதி, கிராம மக்கள் பாதுகாத்து வருகின்றனர். 

News image
வாழப்பாடி அடுத்த கண்கட்டி ஆலா கிராமத்தில் மாரியம்மன் கோயில் அருகே காணப்படும் 200 ஆண்டு முதிர்ந்த வெள்ளை அத்தி மரம்.
Updated On :2 பிப்ரவரி 2024, 11:48 am

பெரியார் மன்னன்

வாழப்பாடி: சேலம் மாவட்டம் அருநுாற்றுமலை அடிவாரம் கண்கட்டி ஆலா  கிராமத்தில், 200ஆண்டு முதிர்ந்த வெள்ளை அத்திமரம், இலையுதிர்ந்த ஒரே வாரத்தில் துளிர்த்து தழைத்து நிழல் கொடுத்து வருகிறது. இம்மரத்தை தெய்வீகத் தன்மை கொண்டதாகக் கருதி, 5 தலைமுறைகளாக கிராம மக்கள் பாதுகாத்து வருகின்றனர். 

வாழப்பாடியை அடுத்த புழுதிக்குட்டை ஊராட்சிக்கு உட்பட்டது கண்கட்டி ஆலா கிராமம். அருநுாற்றுமலை அடிவாரத்தில் அமைந்துள்ள இச்சிறிய கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்களுக்கு காவல் தெய்வமாக விளங்கி வரும் மாரியம்மன் கோயில் எதிரே, ஏறக்குறைய 200 ஆண்டுகள் பழமையான பார்ப்பதற்கு ஆலமரத்தைப் போல் தோற்றமுடைய வெள்ளை அத்தி மரம் படர்ந்து வளர்ந்து காணப்படுகிறது. 

இந்த மரத்தின் தாவரவியல் பெயர் ஸ்பைஸஸ் வைரன்ஸ் என்பதாகும். சேலம் கிழக்கு மாவட்டத்தில் இந்த மரம் அரிதாகவே காணப்படுகிறது.  இந்த கிராம மக்கள், விசிறி ஆல மரம் என்ற பெயரில் குறிபிப்பிடும் இந்த  வெள்ளை அத்தி மரத்தில் விளையும், ஆலம் பழங்களைப் போல தோற்றமுள்ள பழங்கள், மனிதர்கள் உண்ணுவதற்கு உகந்ததல்ல. ஆனால், இந்த பழங்களை பறவைகள் விரும்பி உண்கின்றன. 

ஆண்டு முழுவதும் பசுமையாக காணப்படும் வெள்ளை அத்தி மரத்தடியில் அமர்ந்து கிராம மக்கள் ஓய்வெடுப்பதற்காக போடப்பட்டுள்ள சிமெண்ட் திட்டு இருக்கைகள். 

ஆண்டு முழுவதும் பசுமையாக காணப்படும் வெள்ளை அத்தி மரத்தடியில் அமர்ந்து கிராம மக்கள் ஓய்வெடுப்பதற்காக போடப்பட்டுள்ள சிமெண்ட் திட்டு இருக்கைகள். 

ஆண்டுதோறும் தமிழ் மாதமான பங்குனி மாதத்தில் இலையுதிரும் இந்த மரம் ஒரு வாரத்திற்குள் துளிர்த்து  பச்சைப் பசேலென தழைத்தோங்கி வளர்ந்து நிழல் கொடுத்து வருகிறது. 

எப்போதும் பசுமையாக காணப்படும் இந்த மரத்தடியில் சிமெண்ட் திட்டு இருக்கைகள் அமைத்து கிராம மக்கள் ஓய்வெடுப்பதோடு, கால்நடைகளையும் கட்டி பராமரித்து வருகின்றனர். 

கண்கட்டி வித்தைக் காட்டுவதைப்போல, இலையுதிர்ந்த சில தினங்களிலேயே சட்டென துளிர்த்து தழைத்தோங்கி நிழல் தரும் இந்த மரத்தை காரணமாகக் கொண்டே, இந்த கிராமத்திற்கு கண்கட்டி ஆலா  பெயர் ஏற்பட்டதாக, சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கூறுகின்றனர்.   

ஏறக்குறைய 15 அடி சுற்றுளவு கொண்ட வெள்ளை அத்தி மரத்தின் அடிப்பகுதி.

ஏறக்குறைய 15 அடி சுற்றுளவு கொண்ட வெள்ளை அத்தி மரத்தின் அடிப்பகுதி.

இந்த மரத்திற்கு அருகிலேயே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருவதால், இந்த மரத்து நிழல் பள்ளிக் குழந்தைளுக்கு விளையாட்டு மையாக பயன்பட்டு வருகிறது.

இந்த பாரம்பரிய வெள்ளை அத்தி மரம்  குறித்து வனத்துறையினரிடம் கேட்டதற்கு, ‘இந்த வெள்ளை அத்தி மரம், ஏறக்குறைய 200 ஆண்டு முதிர்ந்ததாக இருக்கலாம். கல்வராயன்மலை, அருநுாற்றுமலை, சந்துமலை உள்பட சேலம் கிழக்கு மாவட்டத்தில் வேறெங்கும் இந்த சிற்றினத்தின் முதிர்ந்த மரங்கள்  காணப்படவில்லை. இந்த மரத்தின் பழங்கள் ஆலமரத்தின் பழத்தைப் போல காணப்படுவதால், விசிறி ஆலமரம் என என்ற பெயரிலேயே கிராம மக்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.  ஒரே வாரத்திற்குள் துளிர்க்கும் தன்மை கொண்டதென தெரியவந்ததால், இதன் விதைகளை சேகரித்து மரக்கன்றுகளை உருவாக்கி வனப்பகுதியில் நடவு செய்ய திட்டமிட்டுள்ளோம்  என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.