/

கயிறு உற்பத்தி செய்யும் 2 ஆயிரம் கூலித்தொழிலாளர்கள் வேலையிழப்பு: நிவாரணத்தொகை வழங்க கோரிக்கை 

கரோனா தொற்று பாதுகாப்பு பொது முடக்கத்தையடுத்து சேலம் மாவட்டம், சங்ககிரி, எடப்பாடி வட்டங்களில் கயிறு தயாரிக்கும் தொழில்களில் ஈடுபட்டு வந்த 2 ஆயிரம் கூலித்தொழிலாளர்கள் வேலையிழந்து உள்ளனர். 

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:36 pm

எஸ்.தங்கவேல்

கரோனா தொற்று பாதுகாப்பு பொது முடக்கத்தையடுத்து சேலம் மாவட்டம், சங்ககிரி, எடப்பாடி வட்டங்களில் கயிறு தயாரிக்கும் தொழில்களில் ஈடுபட்டு வந்த 2 ஆயிரம் கூலித்தொழிலாளர்கள் வேலையிழந்து உள்ளனர். 

அவர்களுக்கு அரசு நிவாரணத்தொகை வழங்க வேண்டுமென தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

சங்ககிரி வட்டம், தேவூர், அரசிராமணி குள்ளம்பட்டி,  எடப்பாடி, சித்தூர், பூலாம்பட்டி, குரும்பப்பட்டி பகுதிகளில்  தொடர்நது மழை  சரிவர பெய்யாததாலும், விவசாயிகள் விவசாயத்தில் உரிய இலாபம் கிடைக்காததாலும் மாற்று தொழில்களை தொடங்க ஆரம்பித்துள்ளனர். கயிறு உற்பத்தி செய்யும் 200 இயந்திரங்களை அமைத்து அதன் மூலம் பல்வேறு வகைகள், மாதிரி  கயிறுகளை உற்பத்தி செய்து வெளி மாநிலங்களுக்கு அனுப்பி  விற்பனை செய்து வருகின்றனர். 

இப்பகுதிகளில் உள்ள கயிறு உற்பத்தியாளர்கள் புதுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, தேனி, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருள்களை வாங்கி உற்பத்தி செய்து வருகின்றனர். உற்பத்தி செய்த பொருள்களை அஸ்ஸாம், ஜார்கண்ட், உத்தரபிரதேசம், ஜம்முகாஷ்மீர், மகராஷ்டிரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூலித்தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பணியாற்றி வருகின்றனர்.  

தற்போது காரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கையாக அரசின் பொது முடக்கத்தையொட்டி பல்வேறு மாநிலங்களில் போக்குவரத்துகள் தடை செய்யப்பட்டுள்ளன. அதனையடுத்து லாரிகளில் கயிறுகள் அனுப்ப முடியாமல் இரு மாதங்களாக உற்பத்தியாளர்கள் இருப்பு வைத்துள்ளனர்.  கயிறுகள் விற்பனையாகததாலும், உற்பத்தி தொடங்க முடியாததால் கூலித்தொழிலாளர்கள் வேலையிழந்து உள்ளனர். வேலையிழந்து உள்ள தொழிலாளர்களுக்கு அரசு நிவாரணத்தொகை வழங்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இது குறித்து கயிறு உற்பத்தியாளர் சக்திவேல் கூறியது:-

கரோனா தொற்று பொது முடக்கத்தால்  உற்பத்தி செய்யப்பட்ட கயிறுகள் விற்பனை செய்ய முடியாமல் தேங்கியுள்ளன.  உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால் 2 ஆயிரம் கூலித்தொழிலாளர்கள் வேலையிழந்து சிரமப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு அரசு நிவாரணத்தொகை வழங்க வேண்டும், உற்பத்தி செய்யும் இயந்திரங்களுக்கான மின்கட்டணத்தை பொது முடக்கம் நாளிலிருந்து கூடுதலாக இரண்டு மாதங்களுக்கு தள்ளுபடி செய்ய வேண்டும், வங்கிகளில் நாங்கள் வாங்கியுள்ள கடன்களை திரும்ப செலுத்துவதற்கான தவணைகளை தற்போது பொது முடக்க காலத்தை விடுமுறையாக கருத்தில் கொண்டு தவணை மாதங்களை அதிகரிக்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.