தமிழகத்தில் மதுவிலக்கு: இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு மாநிலங்களில் மதுவிலக்கை அமல்படுத்துவதில் அந்தந்த மாநில முதல்வர்கள் ஆர்வம் செலுத்தினர். தமிழகத்தில் (சென்னை மாகாணம்) ஓமந்தூர் ராமசாமியின் முயற்சியால் 1950-களில் பூரண மதுவிலக்கு அமலுக்கு வந்தது. காங்கிரஸூக்கு பிறகு அண்ணா ஆட்சியிலும் மதுவிலக்கு அமலில் இருந்தது. ஆனால், முதல்வராக கருணாநிதி இருந்தபோது 1971-இல் ஆகஸ்ட் 30 -இல் மதுவிலக்கு விலக்கிக்கொள்ளப்பட்டது. தாற்காலிக நடவடிக்கையாக இதை தொடங்கியிருப்பதாக கூறிய கருணாநிதி, 1973இல் ஜூலை 30-ஆம் தேதி கள்ளுக்கடைகளையும், 1974-இல் செப்டம்பர் 1ஆம் தேதி சாராயக் கடைகளையும் மூட உத்தரவிட்டார்.
இதற்குப் பிறகு எம்ஜிஆர் ஆட்சியிலும் மதுவிலக்கு அமலில் இருந்தது. ஆனால், நிர்வாக நெருக்கடியால் 1981-இல் மே 1-ஆம் தேதி சாராயக் கடைகளையும், கள்ளுக்கடைகளையும் திறக்க உத்தரவிட்டார் எம்ஜிஆர். 1983-இல் தமிழக அரசால் டாஸ்மாக் நிறுவனம் தொடங்கப்பட்டு, அதன் கீழ் மது விற்பனை நடைபெறத் தொடங்கியது. இருப்பினும் தனியாரும் மது விற்பனையில் இருந்தனர். 2003-இல் "டாஸ்மாக்" மூலம் நேரடியாக மது விற்பனை தொடங்கி, இன்றுவரை நீடித்து வருகிறது. இதற்கிடையே 1989-இல் மலிவு விலை மது அறிமுகம் செய்யப்பட்டது. பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவியதால், ஜெயலலிதா ஆட்சியில் இந்த மலிவு விலை மது விற்பனை நிறுத்தப்பட்டது.
30 ஆயிரம் பேர் நியமனம்: பெருநகரங்களில் ஒரு மதுக்கடைக்கு தலா 9 பேர், நகரங்களில் 7 பேர், ஊரகப் பகுதிகளில் 3 பேர் என கணக்கிட்டு, 14 ஆண்டுகளுக்கு முன் 30 ஆயிரம் பேர் பணியமர்த்தப்பட்டனர். மேற்பார்வையாளருக்கு ரூ.50 ஆயிரம், விற்பனையாளருக்கு ரூ.15 ஆயிரம், உதவி விற்பனையாளருக்கு ரூ.10 ஆயிரம் என முன்பணம் செலுத்தியும், வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலமும் இந்த 30 ஆயிரம் பேர் நியமிக்கப்பட்டனர். இவர்கள், தமிழகத்தில் இருந்த 6,320 மதுக்கடைகளில் பணியமர்த்தப்பட்டனர்.
4 ஆயிரம் கடைகள் மூடல்: இந்த நிலையில், தமிழக அரசின் படிப்படியான மதுவிலக்கு கொள்கையால் 1000 கடைகள், உயர்நீதிமன்ற உத்தரவால் 3,300 கடைகள் என 4,300 கடைகள் மூடப்பட்டுள்ளன. மூடப்பட்ட கடைகளில் பணிபுரிந்த 20 ஆயிரம் ஊழியர்கள் வேலையில்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மூடப்பட்ட கடைகளை வேறு இடங்களில் திறக்க முயற்சி எடுத்தாலும் மக்களின் கடும் எதிர்ப்பால் முடியாமல் போகின்றன. இதனால், சுமார் 300 கடைகளை மட்டுமே மீண்டும் திறக்கும் நிலை உருவாகியுள்ளது. எனவே, 20 ஆயிரம் பணியாளர்களும் ஏற்கெனவே இயங்கி வரும் 2 ஆயிரம் கடைகளில் பணியமர்த்தப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால், ஒரு கடையில் குறைந்தது 20 பேர் பணிபுரியும் நிலை உருவாகி, கடும் நிர்வாக சிக்கலுக்கு வழிவகுத்துள்ளது.