/

ஐஏஎஸ் தேர்வில் சிதம்பரம் மாணவி நந்தினிதேவி தமிழக அளவில் 5-ம் இடத்தில் தேர்ச்சி

சிதம்பரத்தைச் சேர்ந்த மாணவி டாக்டர் கே.நந்தினிதேவி ஐஏஎஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 54-வது இடத்திலும், தமிழக அளவில் 5-ம் இடத்திலும் தேர்ச்சி பெற்றுள்ளார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:39 pm

ஜி. சுந்தர் ராஜன்

சிதம்பரம்: சிதம்பரத்தைச் சேர்ந்த மாணவி டாக்டர் கே.நந்தினிதேவி ஐஏஎஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 54-வது இடத்திலும், தமிழக அளவில் 5-ம் இடத்திலும் தேர்ச்சி பெற்றுள்ளார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் முத்தையா தொழில்நுட்பக்கல்லூரி முதல்வர் ஜி.குப்பன், ராமசாமி செட்டியார் நகர மேல்நிலைப்பள்ளி ஆசிரியை எஸ்.குமுதவள்ளி ஆகியோரின் மகள் கே.நந்தினிதேவி. இவர் சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்டூ வரை படித்தார். பிளஸ்டூ தேர்வில் 1174 மதிப்பெண்கள் பெற்று கடலூர் மாவட்டத்தில் இரண்டாம் இடம் பெற்றார்.

பின்னர் மதிப்பெண் தகுதி அடிப்படையில் சென்னை எம்.எம்.சி மருத்துவக்கல்லூரி இடம் பெற்று எம்பிபிஎஸ் பயின்றார். படித்து முடித்த பின்னர் சென்னை சங்கர் அகாதெமியில் இணைந்து சிவில் சர்வீஸ் பயிற்சி பெற்று முதல் தேர்வு எழுதினார். தற்போது நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் பங்கேற்று முதல் தேர்விலேயே அகில இந்திய அளவில் 54-வது இடத்திலும், தமிழக அளவில் 5-வது இடத்திலும் தேர்ச்சி பெற்றுள்ளார்.

மேலும் இவரது சகோதரர் கே.நவீன்குமார் மதிப்பெண் தகுதி அடிப்படையில் சென்னை எம்எம்சி மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் பயின்றார். இவர் அகில இந்திய முதுகலை படிப்பு தேர்வில் 115 வது இடத்தை பெற்று தேர்ச்சி பெற்று, சென்னை எம்எம்சி கல்லூரியில் எம்.எஸ் ஆர்த்தோ பயின்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.