அரசு சமூக நலத்துறையின் மூலம் முதல்வர் ஏழை பெண்களின் திருமணத்திற்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித்திட்டம், ஈ.வே.ரா.மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண நிதியுதவி, அன்னை தெரசா அம்மையார் ஆதரவற்ற பெண் திருமண நிதியுதவி, தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண திருமண நிதியுதவி, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதியுதவி ஆகிய திட்டங்களின் மூலம் நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம் ஆகியவை வழங்கப்படுகிறது. இதில், 10-ம் வகுப்பு, பிளஸ்2 வரையில் படித்தவர்களுக்கு ரூ.25 ஆயிரமும், பட்டம் மற்றும் பட்டயம் பெற்ற பெண்களுக்கு ரூ.50 ஆயிரமும், தாலிக்கு 4 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது. இதுவரையில் இதற்கான விண்ணப்பங்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலரின் ஒப்புதல் பெற்று, மாவட்ட சமூக நலத்துறைக்கு அனுப்பி வைத்து, பயனாளிகள் தேர்வு செய்து நிதி உதவி வழங்கப்பட்டு வந்தது.