தூத்துக்குடி மாவட்டத்தில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஆனால், தொழிற்சாலைப் பெருக்கத்தால் கடந்த சில ஆண்டுகளாகவே உப்பு உற்பத்தி குறைந்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, கீழஅரசரடி பகுதியில் உள்ள உப்பளங்களில் உற்பத்தி மிகவும் குறைந்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. கீழஅரசரடி பகுதியில் ஏறத்தாழ 500 ஏக்கர் பரப்பளவில் உப்பளங்கள் உள்ளன. இங்குள்ள உப்பள உரிமையாளர்கள் பெரும்பாலானோர் சிறிய அளவில் மட்டுமே உப்பு உற்பத்தி செய்து வருகின்றனர். 2000 குடும்பத்தினர் இங்கு தொழிலாளர்களாக வேலைபார்த்து வருகின்றனர்.