மருத்துவத்தில் மயக்கவியல் துறை, இருதயத் துறை, நரம்பியல் துறை, சிறுநீரகவியல் துறை ஆகியவற்றில் டாக்டர்களுக்கு அடுத்தபடியாக, மருத்துவ சாதனங்களைக் கையாண்டு பரிசோதனை விவரங்களைத் துல்லியமாகக் கணிக்கும் வகையில் குறிப்பிட்ட பணியாளர்கள் செயல்படுவர். மேலும், அறுவைச் சிகிச்சை அறைகளிலும் இந்த வகையான பணியாளர்கள் அவசியம். ஆனால், இந்த வகையான பணியாளர்கள் கடந்த பல ஆண்டுகளாக அனுபவ அடிப்படையிலேயே நியமிக்கப்பட்டு வந்துள்ளனர். இதனால், முறையான பரிசோதனைகள் நடைபெறவில்லை என்ற புகார்கள் எழுந்தன. மேலும், போலி டாக்டர்கள் செயல்படுவதாக புகாரும் எழுந்தது. இதையடுத்து, மருத்துவச் சாதனங்களைக் கையாளும் உதவி நிலை பணியாளர்களுக்கும் முறையான பயிற்சி அளித்து சான்றிதழ் அளிக்கவேண்டும் என சுகாதாரத் துறை தீர்மானித்தது.