தென் மேற்குப் பருவ மழை காலமான கார் பருவத்தில் கடனா நதியின் வடிநிலப் பகுதியான அம்பாசமுத்திரம் வட்டம் ஆழ்வார்குறிச்சி தென்கால்வாய், மஞ்சம்புளி கால்வாய், பெருங்கால்வாய், அரசபத்து கால்வாய் ஆகியவற்றின் கீழ் உள்ள பாசனப் பகுதிகளில் 3 ஆயிரத்துக்கும் கூடுதலான ஏக்கர் நிலங்களில் அம்பை-16, கோவை-65 ஆகிய நெல் ரகங்களை விவசாயிகள் பயிரிட்டிருந்தனர். இதில் ஆழ்வார்குறிச்சி தென்கால் பகுதியான செங்காநல்லூரில் சுமார் 100 ஏக்கர் நிலங்களில் அறுவடைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. எஞ்சிய ஆழ்வார்குறிச்சி, பெத்தபிள்ளை குடியிருப்பு, அழகப்பபுரம், சம்பன்குளம், புதுக்குடியிருப்பு, சிவசைலம், பூவன்குறிச்சி, காசிநாதபுரம், கீழாம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்னும் ஒரு வார காலத்தில் அறுவடைப் பணிகள் தொடங்கும் நிலை இருந்தது.