/

விவசாயப் பணிகளுக்கு ஆள் பற்றாக்குறை: வேலை உறுதியளிப்புத் திட்டம் ஒத்திவைக்கப்படுமா?

திருநெல்வேலி   : வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் தேசிய கிராமப்புற வேலை உறுதியளிப்பு திட்டத்தால் விவசாயப் பணிகளுக்கு ஆள் கிடைக்காமல் விவசாயிகள் அவதியுற்று வருகின்றனர்.  வேலையின்மை காரணமாக

News image
Updated On :27 டிசம்பர் 2023, 6:20 pm

ப. இசக்கி

திருநெல்வேலி   : வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் தேசிய கிராமப்புற வேலை உறுதியளிப்பு திட்டத்தால் விவசாயப் பணிகளுக்கு ஆள் கிடைக்காமல் விவசாயிகள் அவதியுற்று வருகின்றனர்.

 வேலையின்மை காரணமாக ஏற்படும் வறுமையைத் தடுக்க மத்திய அரசானது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை 2005 -ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டமானது தமிழ்நாட்டில் கடந்த 2006 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் செயல்பட்டு வருகிறது.

  முதல் கட்டமாக விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், திண்டுக்கல், சிவகங்கை ஆகிய 6 மாவட்டங்களில் தொடங்கப்பட்டது. இரண்டாவது கட்டமாக தஞ்சாவூர், திருவாரூர், திருநெல்வேலி, கரூர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. மூன்றாவது கட்டமாக 2008 ஆம் ஆண்டு முதல் நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

 கிராமப்புறங்களில் உடல் உழைப்பை மேற்கொள்ள விரும்பும் 18 வயது பூர்த்தி அடைந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டில் 100 நாள்களுக்கு குறையாமல் வேலைவாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்பது இந்த திட்டத்தின் பிரதான நோக்கம். இந்த திட்டத்தின் கீழ் வேலை செய்வோருக்கு ஒரு நாள் கூலியாக ரூ.100 வழங்கப்பட்டு வருகிறது.

 இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதல் விவசாயப் பணிகளுக்கு ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர். விவசாயப் பணிக்கு சென்றால் குறைந்தபட்சம் 6 மணி நேரமாவது வேலைபார்க்க வேண்டும். அதற்கு கிடைக்கும் கூலியைவிட ஊரக வேலை உறுதித் திட்ட வேலையானது எளிதானதாகவும், அதிகமான கூலி கிடைப்பதும் காரணமாக கூறப்படுகிறது.

 வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் சாலைகளை அமைத்தல், செப்பனிடுதல், நீர்நிலைகளை சீரமைத்தல் போன்ற பணிகளே பிரதானமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளுக்கு செல்வோர் விதிமுறைப்படியான வேலை அளவை கூட செய்வதில்லை என்றும், குறைந்த அளவு வேலை செய்துவிட்டு, கணக்கெடுக்க ஆள் வரும் வரை மரத்தடியில் அமர்ந்து பொழுதைப் போக்கிவிட்டு கூலியை மட்டும் பெற்றுக் கொண்டு வந்து விடுவதால் மற்ற வேலைகளுக்கு செல்ல அவர்கள் விரும்புவதில்லை என்ற கருத்தும் கூறப்பட்டு வருகிறது.

 திட்டத்தை அமல்படுத்தும் கிராம ஊராட்சி நிர்வாகிகளில் சிலர் விதிமுறைப்படி வேலை செய்ய வற்புறுத்தும்போது சில இடங்களில் பிரச்னை ஏற்படுவதாகவும், உள்ளூரில் கெட்ட பெயரை ஏற்படுத்திக் கொள்ள விரும்பாத உள்ளாட்சி பிரதிநிதிகள் அதைக் கண்டும், காணாததுமாக இருந்து விடுவதாகவும் கூறப்படுகிறது.

 விவசாயத் தொழில் பிரதானமாக உள்ள திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் இந்த திட்டத்தால் சாதகத்தை விட பாதகமே அதிகம் என்றும், விவசாயத்திற்கு ஆள்கள் கிடைக்காததோடு கூலியும் கட்டுபடியாகாத நிலைக்கு உயர்ந்து விட்டதாகவும் விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது.

 இந்நிலையில், தற்போது வட கிழக்குப் பருவ மழை பெய்யத் தொடங்கியுள்ளது. விவசாயிகள் வேளாண்மை பணிகளை தொடங்கியுள்ளனர். கிணற்றுப் பாசன வசதி உள்ள விவசாயிகள் நடுவை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் நடுவைக்கு ஆள்கள் கிடைப்பதில்லை. இன்னும் ஒரு மாதம் கழித்தால் களை பறிக்க ஆள்கள் தேவைப்படுவர். அதற்கும் ஆள்கள் கிடைக்காத நிலை ஏற்படும்.

 எனவே, விவசாயப் பணிகள் துரிதமாக நடைபெற வேண்டிய காலத்தில் மட்டுமாவது இந்த கிராமப்புற வேலை உறுதியளிப்பு திட்டத்தை குறிப்பிட்ட காலத்திற்கு நிறுத்திவைக்க வேண்டும். அப்போதுதான் விவசாயப் பணிகளை தொய்வின்றி குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க முடியும். பணிகளில் சுணக்கம் ஏற்பட்டால் அதனால் ஏற்படும் காலதாமதம் அறுவடை சமயத்தில் மழை போன்றவற்றால் பாதிக்கப்படும் என்கின்றனர் விவசாயிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.