தென்காசி, ஜூன் 16: இந்திய விடுதலைப் போரில் பகத்சிங்கிற்கும் முன்னோடியான மாவீரன் வாஞ்சிநாதனின் வீரவணக்க விழாவை மத்திய, மாநில அரசுகள் கெüரவிக்காமல் புறக்கணித்து வருவது தியாகிகள் மத்தியில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
÷இந்திய நாட்டிற்காக வாஞ்சிநாதன் தனது உயிரை தியாகம் செய்த ஜூன் 17-ம் தேதி, வாஞ்சிநாதன் வீரவணக்க நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தஆண்டு அவர் உயிர் நீத்த நூறாவது ஆண்டின் துவக்க நாளாகும். ஆனால் வாஞ்சிநாதனின் வீரவணக்க நூற்றாண்டு விழாவை மத்திய,மாநில அரசுகள் சிறப்பாக கொண்டாடாமல் புறக்கணித்து வருவது தியாகிகளிடையே வருத்தத்தை ஏற்படுத்தி வருகிறது.
செங்கோட்டையைச் சேர்ந்த மாவீரன் வாஞ்சிநாதனின் இயற்பெயர் சங்கரநாராயணன். 10-ம் வகுப்பு வரை செங்கோட்டையில் படித்த அவர், பின்னர் திருவனந்தபுரத்தில் பி.ஏ. படித்துக் கொண்டிருந்தபோதே வனத் துறையில் வேலை கிடைத்ததால் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, புனலூரில் வேலைக்குச் சேர்ந்தார். ஆனால் ஆங்கிலேயரிடம் அடிபணிந்து வேலை பார்ப்பதா என்ற எண்ணத்தில் அந்த வேலையை விட்டு வெளியேறினார்.
அப்போது ஆங்கிலேயர்களை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், இந்தியாவின் ஒட்டுமொத்த இளைஞர் சக்தியையும் திரட்டி நாடு முழுவதும் புரட்சியை ஏற்படுத்த வாஞ்சிநாதனும், அவருடைய கூட்டாளிகளும் ஏற்படுத்திய இயக்கம்தான் பாரதமாதா சங்கம்.
இந்த சங்கத்திற்கு மூளையாக இருந்து செயல்பட்டவர்கள் எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரி மற்றும் வாஞ்சிநாதன் ஆவார்கள். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக ராபர்ட் வில்லியம் டி.எஸ்டிகார்ட் ஆஷ்துரை பதவியேற்ற நாள் முதல், சுதேசி சிந்தனையாளர்களையும், சுதேசி பிரசாரம் மேற்கொள்பவர்களையும் கண்மூடித்தனமாக தாக்க உத்தரவிட்டிருந்தார்.
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் மற்றும் சுப்பிரமணிய சிவா ஆகியோரின் கைதுக்கும், திருநெல்வேலியில் ஏற்பட்ட கலகத்திற்கும் காரணமான ஆஷ்துரையை கொலை செய்ய வேண்டும் என்பதில், பாரதமாதா சங்கத்தின் உறுப்பினர்கள் தீவிரமாக இருந்தனர்.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் ஆஷ்துரையை சுட்டுக் கொல்வதற்காக வாஞ்சிநாதன் புதுவையில் பயிற்சி மேற்கொண்டார். அங்கிருந்து செங்கோட்டைக்கு திரும்பிய வாஞ்சிநாதன், தன்னுடைய நண்பர்கள் மூலமாக ஆஷ்துரையின் நடவடிக்கைகளை உளவு பார்க்கச் செய்தார்.
இந்நிலையில்,1911-ம் ஆண்டு ஜூன் 17-ம் தேதி, ஆஷ்துரை கொடைக்கானலுக்கு சென்று ஓய்வெடுக்கப் போவதாக வாஞ்சிநாதனுக்கு தகவல் கிடைத்தது. திருநெல்வேலியிலிருந்து கிளம்பிய ரயிலில் மணியாச்சியில் வேறு வண்டி மாறக் கிடைத்த சந்தர்ப்பத்தில், ஆஷ்துரையை சுட்டுக் கொன்றுவிட்டு, ஒரு கழிவறைக்குள் நுழைந்து தானும் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்துகொண்டார் வாஞ்சிநாதன்.
ஆஷ்துரையை சுட்டுக் கொன்றுவிட்டு அவர் தற்கொலை செய்துகொண்ட நேரம் காலை 10.50 மணி. எனவேதான் அந்த நேரத்தில் செங்கோட்டையில் அவருக்கு வீரவணக்கம் செலுத்தப்படுகிறது. அந்த நேரத்தில் செங்கோட்டை நகராட்சியின் சங்கு ஒலிக்கப்படும்.
ஆஷ்துரையை,வாஞ்சிநாதன் சுட்டுக் கொல்லும் வரையிலும் தமிழர்களை ஆங்கிலேயர்கள் மிகவும் அலட்சியப்படுத்தி வந்தனர். ஆனால் அந்த சம்பவத்திற்குப் பிறகு ஆங்கிலேயர்களுக்கு ஒரு பயம் ஏற்பட்டது என்பதுதான் உண்மை.
ஆஷ்துரை சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் 12-வது எதிரியும், வாஞ்சிநாதனின் கூட்டாளியுமான அழகப்ப பிள்ளையின் மகளும், சுதந்திர போராட்டத் தியாகியுமான செங்கோட்டையைச் சேர்ந்த இ.கோதையம்மாள் கூறியதாவது:
ஆங்கிலேய அரசிற்கு முதன்முதலில் சாவு மணி அடித்தவர் வீரவாஞ்சிநாதன். ஜூன் 17-ம் தேதி அரசு சார்பில் ஆண்டுதோறும் விழா எடுக்க வேண்டும் என்றார் அவர்.
ஆண்டுதோறும் வாஞ்சிநாதனுக்கு வீரவணக்க விழா எடுத்து நடத்திவரும் வாஞ்சி இயக்க நிறுவனர் தலைவர் பி.ராமநாதன் கூறியதாவது:
பகத்சிங் தூக்கிலிடப்பட்ட நாளில் அவரைக் கௌரவப்படுத்தும் வகையில் மத்திய அரசு நாடு முழுவதும் விளம்பரம் பிரசுரம் செய்கிறது. ஆனால் அவருக்கும் முன்னோடியான வாஞ்சிநாதனை அவருடைய வீரவணக்க நூற்றாண்டு சமயம் உள்பட ஒருபோதும் கௌரவிப்பதில்லை.
வாஞ்சிநாதன் பிறந்த செங்கோட்டை 1956-ல் தமிழகத்துடன் இணைக்கப்படுவதற்கு முன்பு வரையிலும் கேரளத்தின் ஒரு பகுதியாகத்தான் இருந்தது. செங்கோட்டை கேரளத்துடன் இணைக்கப்பட்டிருந்தால், மாநில உணர்வு மிக்க கேரளத்த்துக்காரர்கள், மாவீரன் வாஞ்சிநாதனை உயர்த்திப் பிடித்திருப்பார்கள்.
அவரும் பகத்சிங் அளவிற்கு பேசப்பட்டிருப்பார், மத்திய அரசும் அவரை உரிய முறையில் கௌரவித்திருக்கும். இவ் விழாவை மத்திய,மாநில அரசுகள் சார்பில் நடத்தப்படவேண்டும் என்பதே அனைவருடைய விருப்பமாகும் என்றார் அவர்.