சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

தேனி புதிய பஸ் நிலையம்: வனத்துறை நிபந்தனையால் சர்ச்சை

தேனி ,: தேனியில் புதிய பஸ் நிலையம் அமைக்க, தேனி-பெரியகுளம் புறவழிச் சாலையில் உள்ள வனத்துறை நிலம் கையகப்படுத்தப்பட்டு, திட்ட மதிப்பீடு தயார் செய்து, நகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள

News image
Updated On :27 டிசம்பர் 2023, 4:11 pm

கோ.ராஜன்

தேனி ,: தேனியில் புதிய பஸ் நிலையம் அமைக்க, தேனி-பெரியகுளம் புறவழிச் சாலையில் உள்ள வனத்துறை நிலம் கையகப்படுத்தப்பட்டு, திட்ட மதிப்பீடு தயார் செய்து, நகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், வனத்துறை விதித்துள்ள நிபந்தனைகள் குறித்து புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

தேனியில் புதிய பஸ் நிலையம் அமைக்க பல்வேறு வகைகளில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு, தேனி-பெரியகுளம் புறவழிச்சாலையில் சிட்கோ வளாகம் அருகில் 7.35 ஏக்கர் பரப்பளவில் உள்ள வனத்துறை இடம் தேர்வு செய்யப்பட்டது.

புதிய பஸ் நிலைய இடத்துக்காக நகராட்சி நிர்வாகம் சார்பில், வருவாய்த்துறை மூலம் வனத்துறைக்கு இரு மடங்கு மாற்று இடம் வழங்கப்பட்டுள்ளது. வனத்துறையின் நிபந்தனைகளுக்கு உள்பட்டு, பஸ் நிலையம் அமைய உள்ள நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது நகராட்சி நிர்வாகம் மூலம், இந்த இடத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க ரூ. 11.50 கோடியும், வணிக வளாகம் அமைக்க ரூ. 4.50 கோடியும் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த தீர்மானம் நகராட்சிக் கூட்டத்தில், மொத்தமுள்ள 33 கவுன்சிலர்களில் 18 பேரின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில், புதிய பஸ் நிலையம் அமைக்க இடம் வழங்கியதற்கு வனத்துறை விதித்துள்ள பல்வேறு நிபந்தனைகளை தளர்வு செய்யக்கோரி, தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு எதிப்பு தெரிவித்து, அதிமுக, தேமுதிக, காங்கிரஸ் கவுன்சிலர்கள் உள்பட சிலர் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தியுள்ளனர்.

வனத்துறை நிபந்தனைகள்:

நகராட்சிக்கு வழங்கப்பட்ட நிலத்தினை ஒதுக்கீடு செய்யப்பட்ட பயன்பாட்டிற்கு இரண்டு ஆண்டுகளுக்குள் கொண்டுவர வேண்டும். தவறும்பட்சத்தில் இடத்தினை வனத்துறை தன் வசமே எடுத்துக்கொள்ளும். சட்ட உரிமையின்படி வனத்துறை இடத்தினை உரிமம் மாற்றம் செய்ய முடியாது. நகராட்சி சார்பில் வனத்துறைக்கு ஆண்டுக் குத்தகையாக ரூ.4 லட்சத்து 27 ஆயிரத்து 220-ஐ செலுத்த வேண்டும். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை குத்தகைத் தொகை மாற்றம் செய்யப்படும். அரசாணை வெளியிடப்பட்ட நாள் முதல் 20 ஆண்டுகள் வரை இது நடைமுறையில் இருக்கும். அனுமதியை ஒவ்வொரு ஆண்டும் உரிய குத்தகை செலுத்தி புதுப்பித்துக்கொள்ள வேண்டும். பஸ் நிலையத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்திலிருந்து கனிமப் பொருள்களை எடுக்கக் கூடாது. வனத்துறையால் வழங்கப்பட்டுள்ள அனுமதி எந்த நேரமும் வனத்துறையால் திரும்பப் பெறப்படும். அதற்காகச் செலுத்திய பிரதி பலன்கள் திரும்ப தரப்படமாட்டாது. வனப்பகுதி மற்றும் வன விலங்குகளுக்கு எவ்வித தீங்கும் ஏற்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட நிபந்தனைகளை வனத்துறை விதித்துள்ளது.

வனத்துறை விதித்துள்ள நிபந்தனைகளால் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படும். வாகன ஓட்டிகள், பயணிகள் அதிகம் நெருக்கடிக்கு உள்ளாவார்கள் என்பது தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கவுன்சிலர்களின் கருத்தாக உள்ளது.

இதுகுறித்து மற்றொரு தரப்பு கவுன்சிலர்கள் கூறியதாவது:

தேனியில் தற்போது உள்ள பஸ் நிலையம், வாரச் சந்தை வளாகம் ஆகிய இடங்கள் ஆண்டுக் குத்தகை அடிப்படையில் பெற்றுதான் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நகராட்சி மற்றும் வருவாய்த் துறைக்கு சொந்தமான இடம் இல்லாத நிலையில், தமிழ்நாடு வனத்துறை சட்டம் 1882 மற்றும் தமிழ்நாடு வன விலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972 ஆகியவற்றிற்கு உள்பட்டு, வனத்துறையிடம் நிலம் பெறுவதற்கு ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், திட்டத்தைச் செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றனர்.

தேனி நகராட்சி நிர்வாகம், புதிய பஸ்நிலையம் குறித்து சர்ச்சையை ஏற்படுத்தாமல், ஒருமித்தக் கருத்துடன் செயல்பட்டு நகரில் ஏற்பட்டுவரும் போக்குவரத்து நெரிசல், விபத்துகள், பஸ் நிலையத்தில் நிலவிவரும் இடநெரிசல், எதிர்காலத் தேவை ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு, புதிய பஸ்நிலையம் தொடங்குவதற்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.