/

பிசிசிஐ தலைவராக சௌரவ் கங்குலி பொறுப்பேற்பு

கடந்த 2017 முதல் 33 மாதங்கள் சிஓஏ தரப்பு பிசிசிஐ நிர்வாகத்தை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் பிசிசிஐ நிர்வாகிகள் தேர்தல் அக்டோவர் 23-ஆம் தேதி நடைபெறும் என சிஓஏ அறிவித்தது. 

News image
Updated On :31 ஜனவரி 2024, 10:29 am

Raghavendran

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமையகத்தில் புதன்கிழமை மும்பையில் நடைபெற்றது. அப்போது பிசிசிஐ புதிய தலைவராக சௌரவ் கங்குலி பொறுப்பேற்றுக்கொண்டார். 10 மாதங்களே தலைவர் பொறுப்பில் கங்குலி பதவி வகிப்பார். 

ஐபிஎல் தொடரில் மேட்ச் பிக்ஸிங் புகார் எழுந்ததை அடுத்து, பிசிசிஐ செயல்பாடுகளை வெளிப்படையாக நடத்தவும், நீதிபதி லோதா குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவும், முன்னாள் தலைமை கணக்காயர் வினோத் ராய், மகளிரணி முன்னாள் கேப்டன் டயானா எடுல்ஜி ஆகியோர் கொண்ட கிரிக்கெட் நிர்வாகக் குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது.

கடந்த 2017 முதல் 33 மாதங்கள் சிஓஏ தரப்பு பிசிசிஐ நிர்வாகத்தை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் பிசிசிஐ நிர்வாகிகள் தேர்தல் அக்டோவர் 23-ஆம் தேதி நடைபெறும் என சிஓஏ அறிவித்தது. மேலும் அனைத்து மாநில சங்கங்களும் புதிய சட்டவரையறையை ஏற்று நிர்வாகிகள் தேர்தலை நடத்தின. விதிகளை பின்பற்றவில்லை எனக்கூறி தமிழகம் உள்பட சில மாநிலங்களுக்கு தேர்தலில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Story image

கடந்த 14-ஆம் தேதி மனுத் தாக்கல் செய்ய இறுதிநாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. தலைவர் பதவிக்கு முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி மட்டுமே மனு செய்திருந்தார். இதையடுத்து அவர் தலைவர் பதவிக்கு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

மேலும் செயலாளர் பதவிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மகன் ஜெய் ஷா, துணைத் தலைவர் பதவிக்கு உத்தரகாண்டின் மஹிம் வர்மா, பொருளாளர் பதவிக்கு பிசிசிஐ முன்னாள் தலைவர் அனுராக் தாகுர் சகோதரர் அருண் துமல், இணைச் செயலர் பதவிக்கு கேரளத்தின் ஜெயேஷ் ஜார்ஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.