/

ஆஷஸ் தொடரில் ஆஸி. அணிக்கு 'சிறப்பு ஆலோசகர்' வருகை

ஆஷஸ் தொடருக்காக ஆஸ்திரேலிய அணிக்கு சிறப்பு ஆலோசகர் வருகை தரவுள்ளதாக டெஸ்ட் அணி கேப்டன் டிம் பெய்ன் தெரிவித்தார். 

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:26 am

Raghavendran

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா இடையே நடைபெறும் மிகப்பெரிய வரலாறு கொண்ட இந்த ஆஷஸ் டெஸ்ட் தொடர், கிரிக்கெட்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த ஆஷஸ் கிரிக்கெட் தொடருக்காக ஆஸ்திரேலிய அணிக்கு சிறப்பு ஆலோசகர் வருகை தரவுள்ளதாக டெஸ்ட் அணி கேப்டன் டிம் பெய்ன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

நானும், தலைமைப் பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கரும், தலைசிறந்த முன்னாள் வீரர்களை ஆஸ்திரேலிய அணியுடன் ஏதேனும் ஒருவகையில் தொடர்புபடுத்த வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆலோசித்து வந்தோம்.

அதனடிப்படையில் உலகக் கோப்பை விளையாடி வரும் ஒருநாள் அணியுடன் ரிக்கி பாண்டிங் இணைந்துள்ளார். அந்த வகையில் தற்போது ஆஷஸ் தொடருக்கான ஆஸி. அணியின் சிறப்பு ஆலோசகராக மற்றொரு முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாஹ் ஒப்புக்கொண்டுள்ளார்.

Story image

எனவே அவர் இந்தத் தொடர் நடைபெறும் 6 வார காலம் ஆஸ்திரேலிய அணியுடன் இணைந்து பணியாற்ற உள்ளார். மிகப்பெரிய ஜாம்பவான் வீரரான அவர் ஆஸி. அணியுடன் இணைந்து செயலாற்றுவது ஒரு கேப்டனாகவும், தனிப்பட்ட முறையில் எனது தலைமையை வளர்த்துக்கொள்ளவும் பெரிதும் உதவும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மொத்தம் 168 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ள ஸ்டீவ் வாஹ், இங்கிலாந்தில் மட்டும் 46 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். கடந்த 2001-ஆம் ஆண்டு இவரது தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தான் இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடரை கடைசியாக கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.  

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடர் எட்ஜ்பாஸ்டனில் உள்ள பர்மிங்கம் மைதானத்தில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி தொடங்கி நடைபெறவுள்ளது நினைவுகூரத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.