டி20 உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெறுவதால் ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமாக இருக்கும். (அப்படி இருக்கவேண்டியதில்லை. எல்லா அணிகளுக்கும் ஏற்றாற்போல இருக்கும் என்று ஒருமுறை ஐசிசி நிர்வாகி கூறியிருந்தார். இருந்தாலும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு உகந்த ஆடுகளங்களையே நாம் எதிர்பார்க்க முடியும்.) எனவே இந்திய அணியில் ஏராளமான சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளார்கள். மேலும் தோனிக்கு ஆல்ரவுண்டர்கள் மீது எப்போதும் ஒரு கண் உண்டு. அந்த வகையில் யுவ்ராஜ், நெகி, பாண்டியா ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. டி20 போட்டியில் வழக்கமான பந்துவீச்சாளர்கள் சொதப்பும்போது கூடுதலாக ஆல்ரவுண்டர்கள் இருந்தால் அது வசதியாக இருக்கும் என்று தோனி அடிக்கடி கூறுவார். அதன்படியே ஆல்ரவுண்டர்கள் மிகுந்த இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த 15 பேரில் ஷமி, நெஹ்ரா, பூம்ரா என மூன்று பேருக்கு மட்டுமே பேட்டிங் திறமை இல்லை என்பதையும் பார்க்கவேண்டும்.