பிலிப் ஹியூஸின் உடல் அவருடைய சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கு நிகழ்ச்சி அவர் படித்த மேக்ஸ்வில்லே உயர் நிலைப் பள்ளியில் நடைபெற்றபோது, ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட் உள்ளிட்ட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில் அப்போதைய ஆஸ்திரேலிய அணியின் கேப்டனும், ஹியூஸின் நெருங்கிய நண்பருமான மைக்கேல் கிளார்க் புகழஞ்சலி செலுத்தினார். அவருடைய பேச்சு மிகவும் உணர்வுபூர்வமாக அமைந்தது. ‘ஹுயூஸை நான் எப்போதும் தேடுவேன். இது பைத்தியகாரத்தனமாகத் தெரிந்தாலும் அவருடைய தொலைப்பேசி அழைப்புக்காக நான் எப்போதும் காத்திருப்பேன். அவர் முகத்தைக் காணவும் ஆசைப்படுகிறேன். இதைத்தான் ஆன்மா என்பதா? அப்படியென்றால் அவர் ஆன்மா இன்னமும் என்னிடம் உள்ளது. அது ஒருபோதும் என்னைவிட்டுப் போகாது’ என்றார். பிலிப் ஹியூஸின் இறுதிச்சடங்கு நடைபெற்றதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலர் ட்விட்டரில் தங்களது இரங்கலையும், வருத்தத்தையும் பகிர்ந்துகொண்டார்கள்.