உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இஸ்ரேலின் போரீஸ் கெல்ஃபான்டை வீழ்த்தி 5-வது முறையாக பட்டம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார் செஸ் உலகின் முடிசூடா மன்னனான விஸ்வநாதன் ஆனந்த்.
தனது 6-வது வயதில் செஸ் பயணத்தைத் தொடங்கிய ஆனந்த், கடந்த 20 ஆண்டுகளாக உலக செஸ் போட்டியில் கோலோச்சி வருகிறார். அவர் 42 வயதை எட்டியிருந்தாலும், அவருடைய ஆட்டத்தின் வேகத்துக்கு மட்டும் இளமை குறையவில்லை. 24 வயதில் விளையாடியதைப் போன்றே இப்போதும் விரைவாக காய்களை நகர்த்தி வெற்றியைத் தொடர்ந்து வருகிறார்.
ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற உலக செஸ் போட்டியின் டை பிரேக்கர் சுற்றில் கெல்ஃபான்டுக்கு எதிராக அபாரமாக காயை நகர்த்திய ஆனந்தின் உத்வேகம், அந்தப் போட்டியை பார்த்த அனைவருக்குமே தெரிந்திருக்கும். பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் இடையே நடைபெற்ற படுவேக டைபிரேக்கர் சுற்றில் எவ்வித பதற்றமுமின்றி, லாவகமாக காய்களை நகர்த்தி முன்னணி வீரரான கெல்ஃபான்டை தோற்கடித்தார் ஆனந்த்.
தமிழகத்தின் மயிலாடுதுறையில் பிறந்த ஆனந்த், தன்னுடைய தாயார் சுசீலாவிடமும், குடும்ப நண்பரான தீபா ராமகிருஷ்ணனிடமும்தான் செஸ் விளையாடக் கற்றுக்கொண்டார். செஸ் மீதான தீராத காதலால் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் அளவுக்கு அடுத்த சில ஆண்டுகளில் உயர்ந்தார்.
5 முறை உலகச் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியவரான ஆனந்த், இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டரும்கூட. டோர்னமென்ட், மேட்ச், ரேபிட், நாக் அவுட் ஆகிய முறைகளில் நடத்தப்பட்ட உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பட்டம் வென்ற ஒரே வீரர் என்ற பெருமையும் ஆனந்தையே சேரும். 2007-ல் இருந்து தொடர்ச்சியாக 4 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். தனது அபரிமிதமான சாதனைக்காக 18-வது வயதிலேயே பத்மஸ்ரீ விருது வாங்கியவர். இந்தியாவின் இரண்டாவது மிக உயரிய விருதான பத்மவிபூஷன் விருதைப் பெற்ற முதல் விளையாட்டு வீரர்.
இந்த விருது அவருக்கு 2007-ல் வழங்கப்பட்டது. ராஜீவ் காந்தி கேல்ரத்னா விருதைப் பெற்ற முதல் வீரரும்கூட. சிறந்த விளையாட்டு வீரருக்கு வழங்கப்படும் அர்ஜுனா விருதையும் பெற்றுள்ளார்.
செஸ் போட்டியில் ஒரு காலத்தில் ரஷியர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தியதோடு, பல்வேறு சாதனைகளையும் படைத்து வந்தனர். செஸ் என்றால் ரஷியர்கள்தான் என்று சொல்லும் அளவுக்கு அவர்கள் கோலோச்சினர். ஆனால் தொடர்ச்சியாக 4 முறை பட்டம் வென்றதன் மூலம் வரலாற்றை மாற்றியுள்ளார் ஆனந்த்.
கௌரவம்
2010, நவம்பரில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியா வந்தபோது, பிரதமர் மன்மோகன் சிங் அவருக்கு விருந்து கொடுத்தார். அதற்கு அழைக்கப்பட்ட ஒரே விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த் மட்டுமே.
கடந்து வந்த பாதை
1983-ம் ஆண்டு தேசிய அளவிலான சப்-ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்றார் ஆனந்த். இதுதான் தேசிய அளவிலான போட்டிகளில் அவர் பெற்ற முதல் வெற்றி.
1984-ம் ஆண்டு தனது 15-வது வயதில் சர்வதேச மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் பட்டம் வென்ற இந்தியாவின் இளம் செஸ் வீரர் என்ற பெருமைக்குரியவரானார்.
தனது 16-வது வயதில் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்றார்.
1987-ல் உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் வெற்றி கண்டார். இதில் வெற்றி கண்ட முதல் இந்தியர் ஆனந்த்.
1988-ல் கோவையில் நடைபெற்ற சர்வதேச செஸ் போட்டியில் வெற்றி கண்டு இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் ஆனார்.
1991-ம் ஆண்டு உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு முதல்முறையாக தகுதிபெற்றார். அந்தப் போட்டியின் முதல் சுற்றில் ரஷியாவின் அலெக்ஸீ கிரீவை வென்ற ஆனந்த், காலிறுதிச் சுற்றில் ரஷியாவின் அனடோலி கார்போவிடம் வீழ்ந்தார்.
1995: ஃபிடே உலக செஸ் போட்டியின் அரையிறுதியில் அமெரிக்காவின் கதா காம்ஸ்கியிடம் வீழ்ந்தார்.
பிசிஏ உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்றில் ரஷியாவின் கேரி காஸ்பரோவிடம் தோல்வி கண்டார்.
1997: ஸ்விட்சர்லாந்தின் லாசன்னே நகரில் நடைபெற்ற ஃபிடே உலக செஸ் போட்டியின் இறுதிச்சுற்றில் ரஷியாவின் கார்போவிடம் தோல்வி கண்டார்.
2000: ரஷியாவின் அலெக்ஸீ ஷிரோவை வீழ்த்தி முதல் முறையாக உலக செஸ் சாம்பியன் ஆனார்.
2001: உலக செஸ் போட்டியின் அரையிறுதியில் உக்ரைனின் இவான் சுக்கிடம் தோல்வி கண்டார்.
2005: அமெரிக்காவின் சான் லூயிஸில் நடைபெற்ற உலக செஸ் போட்டியில் பல்கேரியாவின் வேஸிலின் டோபாலோவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
2007: மெக்ஸிகோவில் நடைபெற்ற உலக செஸ் போட்டியில் 2-வது முறையாக சாம்பியன் ஆனார்.
2008: ஜெர்மனியில் நடைபெற் உலக செஸ் போட்டியில் ரஷியாவின் விளாதிமிர் கிராம்னிக்கை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.
2010: பல்கேரியாவின் தலைநகர் சோபியாவில் நடைபெற்ற உலக செஸ் போட்டியில் உள்ளூர் நாயகனான வேஸலின் டோபாலோவை வீழ்த்தி 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.
2012: ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற உலக செஸ் போட்டியில் இஸ்ரேலின் போரீஸ் கெல்ஃபான்டை வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.
கிராம்னிக்
ஆனந்த் குறித்து ரஷியாவின் முன்னணி வீரரான விளாதிமிர் கிராம்னிக் கூறுகையில், "ஒட்டுமொத்த செஸ் வரலாற்றில் அசாத்திய திறமை கொண்ட வீரர்களில் ஆனந்தும் ஒருவர். அவர் நிகரற்ற சாம்பியன். செஸ் உலகின் ஜாம்பவான் காஸ்பரோவைவிட ஆனந்த் எந்தவகையிலும் பலவீனமான வீரர் அல்ல' என்று குறிப்பிட்டுள்ளார்.
காரில் சென்று சாதித்த ஆனந்த்
2010-ம் ஆண்டு உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி பல்கேரியாவின் தலைநகர் சோபியாவில் நடைபெற்றது. ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரில் இருந்து விமானம் மூலம் சோபியாவுக்கு செல்ல திட்டமிட்டிருந்தார் ஆனந்த். ஆனால் அந்த நேரத்தில் எரிமலை வெடிப்பின் காரணமாக காற்றில் பறந்த சாம்பல் துகள்களால், அங்கிருந்து புறப்படவிருந்த அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து 40 மணி நேரம் காரில் பயணம் செய்து பல நாடுகள் வழியாக சுமார் 1,700 கி.மீ. தூரத்தைக் கடந்து சோபியாவை அடைந்தார் ஆனந்த். 40 மணி நேரம் பயணம் செய்தபோதிலும் அயராத ஆனந்த், சோதனையைத் தாண்டி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருவெற்றியூர் ஸ்ரீபாகம்பிரியாள் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்!

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்வு! 25,000 -யை நெருங்கும் நிஃப்டி!

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா கொடியேற்றம்!
ஒரே தேர்தலில் 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


