/

செஸ் அகாதெமி தொடங்கும் எண்ணம் இல்லை: விஸ்வநாதன் ஆனந்த்

கோவை, ஜூன் 22: செஸ் அகாதெமி தொடங்கும் எண்ணம் இல்லை என உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்தார்.  கோவையில் என்.ஐ.ஐ.டி. ஒன்வேர்ல்டு பயிற்சி மையத்தின் தொடக்க நிகழ்ச்சி சாய் பாபா காலனியில் புதன்க

News image
Updated On :28 டிசம்பர் 2023, 5:56 pm

ஆர். ஆதித்தன்

கோவை, ஜூன் 22: செஸ் அகாதெமி தொடங்கும் எண்ணம் இல்லை என உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்தார்.

 கோவையில் என்.ஐ.ஐ.டி. ஒன்வேர்ல்டு பயிற்சி மையத்தின் தொடக்க நிகழ்ச்சி சாய் பாபா காலனியில் புதன்கிழமை நடைபெற்றது. உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி ஆகியோர் இந்த பயிற்சி மையத்தை தொடங்கி வைத்தனர்.

 பின்னர் விஸ்வநாதன் ஆனந்த் செய்தியாளர்களிடம் கூறியது:

 எனக்கு கோவை நகரம் புதிதல்ல. எனக்கும் கோவை நகருக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. கடந்த 1984-ல் கோவையில் நடைபெற்ற செஸ் போட்டியில் ஆசிய சாம்பியன்ஷிப் பட்டம் மற்றும் 1987-ல் கிராண்ட் மாஸ்டர் என இரு பட்டங்களை பெற்றேன்.

 என்.ஐ.ஐ.டி. மைண்ட் சாம்பியன்ஷிப் அகாதெமி சார்பில் நாடு முழுவதும் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் படிப்புடன், செஸ் ஆடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த 10 லட்சம் பேரும், தலா 20 போட்டிகள் வரை ஆடி இருப்பார்கள்.

 கிரிக்கெட் அளவுக்கு செஸ் போட்டி பிரபலம் ஆகவில்லை என்பது உண்மையே. கிரிக்கெட் போல, செஸ் போட்டிகளை பிரபலப்படுத்த முன்முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நிச்சயம் ஒருநாள் செஸ் போட்டி பிரபலம் ஆகும்.

 இப்போதைக்கு சொந்தமாக செஸ் அகாதெமி தொடங்கும் எண்ணம் இல்லை. அதற்கு போதிய உள்கட்டமைப்பு வசதி வேண்டும். தவிர, அகாதெமியில் பயிற்சி பெறுபவர்களுக்கு போதிய ஆலோசனைகள் வழங்க வேண்டும். இதற்கு நிறைய நேரம் தேவைப்படும் என்பதால், செஸ் அகாதெமி தொடங்கும் எண்ணம் இல்லை.

கோவையில் தொடங்கப்பட்டுள்ள என்.ஐ.ஐ.டி. ஒன்வேர்ல்ட் பயிற்சி மையம், மாணவர்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து, வேலைவாய்ப்புக்கான பயிற்சிகளை வழங்கும். இது இங்குள்ள மாணவர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்றார் விஸ்வநாதன் ஆனந்த்.

 என்.ஐ.ஐ.டி. வேலைவாய்ப்பு பிரிவு தலைமைச் செயல்அதிகாரி ராகவன் கூறியது:

 நாட்டிலேயே முதன்முதலாக என்.ஐ.ஐ.டி. ஒன்வேர்ல்டு பயிற்சி மையத்தை தொடங்கி உள்ளோம். இதில் வங்கிகள், நிதித்துறை, மேலாண்மை மற்றும் பி.பி.ஓ. என பல துறை சார்ந்த வேலைவாய்ப்பு பயிற்சிகள் அளிக்கப்படும். நாடு முழுவதும் மேலும் 8 ஒன்வேர்ல்டு பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் என்றார்.

 என்.ஐ.ஐ.டி. ஐ.எஃப்.பி.ஐ. (இன்ஸ்டிட்யூட் ஆஃப் பைனான்ஸ் பேங்கிங் அண்ட் இன்சூரன்ஸ்) தலைவர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 என்.ஐ.ஐ.டி. ஒன்வேர்ல்டு பயிற்சி மையத்தை தொடங்கி வைக்கிறார் விஸ்வநாதன் ஆனந்த்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.