சனியின் தீவிர பாதிப்புகளை போக்குமா விஷ்ணு சஹஸ்ரநாமம்?
எதனை இயலாமல் செய்யும், ஸ்ரீமன் நாராயணனின் நாமம்? சனி பகவான் எப்போது தீய விளைவுகளை அளிப்பார் / அளிக்க மாட்டார் என்று முதலில் தெரிந்துகொள்வோம்.


ஜோதிடர் தையூர். சி. வே. லோகநாதன்
எதனை இயலாமல் செய்யும், ஸ்ரீமன் நாராயணனின் நாமம்? சனி பகவான் எப்போது தீய விளைவுகளை அளிப்பார் / அளிக்க மாட்டார் என்று முதலில் தெரிந்துகொள்வோம்.
ஒரு ஜாதகரின் ஜாதகக் கட்டம் தான் அதனை தீர்மானிக்கும். சிலருக்கு, சனி மிகச் சிறப்பான நன்மைகளைச் செய்திருக்கிறார். ரிஷபத்திற்கும், துலாத்திற்கும் சனி தான் யோகாதிபதி ஆகிறார். ஆம், அவரே கேந்திராதிபதியாகவும், திரிகோணாதிபதியாகவும் வருவதால், யோகாதிபதி ஆகிறார். ரிஷபத்திற்கு, 9, 10க்கு அதிபதியாகவும், துலாத்திற்கு 4, 5 க்கு அதிபதியாகவும் வருவதே ஆகும். இதனால், ரிஷப, துலா லக்கினகாரர்களுக்கு பொதுவாக சனி யோகாதிபதியாகி, பல நன்மைகளைச் செய்கிறார்.
சனிக்கு பகை ராசிகள் - செவ்வாயின் வீடுகளான மேஷம், விருச்சிகம் மற்றும் சந்திரனின் வீடான கடகம், சூரியனின் வீடான சிம்மத்திலும் பகையாவார். இந்த வீட்டிற்கு இவர் நன்மையை பொதுவாக செய்யமாட்டார். இப்படி பொத்தாம் போக்காகவும் சொல்லிவிடமுடியாது. இந்த ராசிகளில் உள்ள சில நட்சத்திர பாதத்தில் நிற்கும்போது மட்டும் தான் அவர் பகையாவார். நன்மையைச் செய்யமாட்டார்.
பொதுவாக கூறவேண்டுமானால், சனி - மேஷத்தில் நீச்சம். ஒருவரின் ஜாதகத்தில், இங்கு சனி நிற்பதனால் நீச்சம் என்று எடுத்துக்கொள்ள முடியாது. உதாரணத்திற்கு, மேஷ ராசியில், அஸ்வினி நட்சத்திரம் அனைத்து பாதங்களிலும் சனி நிற்க பிறந்தவர்களுக்கு தீங்கு நேராது. அஸ்வினி -1 ஆம் பாதம் நீச்ச நவாம்சம் அடைவதால் அந்த பாதத்தில் சனி நின்றவர்களுக்கும், அஸ்வினி 4 ஆம் பாதத்தில் சனி நின்றவர்களுக்கு பகை நவாம்சம் பெறுவதால், இந்த இரு பாதங்களில் நின்ற சனி தான் தீமையான பலனை அளிப்பார். அஸ்வினி 2, 3 பாதத்தில் நிற்கும் சனியால் தீமை ஏற்படாது.
இது போல் ஒவ்வொன்றாக பார்த்து தான் தீர்மானித்திடல் வேண்டும். பொதுவாக மேஷத்தில் சனி நீச்சம் என கொண்டு சனி மேஷத்தில் நிற்கும். அனைவருக்கும் தீய பலன்களே ஏற்படும் எனச் சொல்லிவிட முடியாது. சனி பகவான் ஒரு தோத்திர பிரியர். அவரை மனம் உருக தோத்தரித்தால், நிச்சயம் பல நன்மைகளை , நமது கர்ம வினைகளைக்கு ஏற்ப தக்கபடி பலன்களை அருள்வார்.

சனி பகவானை தோத்தரிக்கும் அகரவரிசையில் வரும் வரிகளை மனம் ஒன்றி படிக்கவும். ( ம் +அ = ம , ம் + ஆ = மா ... இது போல் துவங்கும் வரிகள்.)
சனியின் பாதிப்புகளிலிருந்து விடுபட, அவரின் துதிகளைக் கூறினால் அவர் மிகவும் மகிழ்வார். ஏனெனில் அவர் ஒரு தோத்திர பிரியர் ஆவார். அவரின் தோத்திரம் துதி செய்யலாம். எவர்களுக்கு சனியின் தீவிர பாதிப்புகள் உள்ளதோ அவர்கள் சனியன்று சனி பகவானை நினைத்துக் கூறினால் நிச்சயம் சனி பகவான் மகிழ்ந்து பாதிப்பின் அளவை குறைப்பதோடு, பாதிப்பை எதிர்கொள்ளும் சக்தியையும் தருவார் என்பதில் சிறிதளவும் சந்தேகம் வேண்டாம்.
மனிதர்களின் நான்கு இலக்குகள், பாதுகாப்பு, மகிழ்ச்சி, நெறிமுறைகள் மற்றும் சுதந்திரம் / விடுதலை ( அர்த்த, காம , தர்ம, மோக்க்ஷ ) இவற்றை அளிக்கிறார் அந்த மகாவிஷ்ணு என பல வேதங்கள் உரைப்பதுடன் சாட்சிகளாகவும் இருக்கின்றன.
இவை இரண்டு வகையாக வரும். பாதுகாப்பு, மகிழ்ச்சி எனும் இணைந்த ஒரு வகை, எல்லா உயிருள்ள ஜீவராசிகளுக்கும் பொருந்தும் ஆனால் அடுத்த வகையில் வரும் நெறிமுறைகள் மற்றும் சுதந்திரம் / விடுதலையும் சேர்ந்து நான்கும் விசித்திரமாக மானிட ( மனித) பிறவிகளுக்கு மட்டுமே பொருந்தும் மற்ற உயிரினங்களான தாவரம், விலங்குகளுக்கு இது பொருந்தா.
அதனால் தான், சனியின் பாதிப்புகள் மகாவிஷ்ணுவை வணங்குவதால், நமது கர்ம வினையால் வந்த அனைத்து கெடுதல்களை அறவே நீக்கச் செய்யும் என்பதனை ஒரு சிறிதும் சந்தேகம் வேண்டாம்.
துருவன், பிரஹலாதன் மற்றும் அர்ஜுனன் போன்றவர்களின் வாழ்க்கையையே உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளலாம். அது பொருள் தேவையாகவும் இருக்கலாம், ஆன்மிக தேடலாகவும் இருக்கலாம், மகாவிஷ்ணு அவற்றை தருவதற்கும், அருள்வதற்கும் தயாராகவே எந்நேரமும் இருப்பார் என்பது வெட்டவெளிச்சம்.
எந்த விதமாகப் பகவானைத் துதிக்கிறார்களோ பரஸ்பரம் அந்தவிதமாகவே தமது பக்தர்களுக்கு அருள்புரிவார் எனபதனை, ஸ்ரீமத் பகவத் கீதையில், தெள்ளத்தெளிவாக கூறி இருப்பதைக் காணலாம். நல்ல பக்தியும், உணர்வும் தான் இங்கு முக்கியம். வலிமை மற்றும் முயற்சியுடன் எவ்வளவு பக்தி செலுத்துகிறோமோ, எதிர்பார்ப்பு இல்லாமல் அப்பாவித்தனமான எண்ணம் இருப்பின், அதற்கு நேர் இணையான அதே அளவு பயன் விளையவும் செய்யும் எனபதனை இங்கு மறக்கக்கூடாது .
அதே போன்று, ஸ்ரீமத் பகவத் கீதையில், பக்தி யோகம் மட்டும் தான் மற்ற மூன்று வகையான அதாவது, கர்மயோகம் , ஞானயோகம் மற்றும் ராஜ யோகத்தை விடச் சிறப்பானது என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. அதனால், நேர்மையான முறையில் நமது பிரபுவின் மேல் நம்பிக்கையையும், பக்தியையும் நாம் வளர்த்துக்கொண்டால் போதுமானது.
விஷ்ணு சஹஸ்ரநாமம் எனும் ஆயிரத்து எட்டு நாமகளைச் சொல்லாவிட்டாலும், பரவாயில்லை. பின்வரும் இந்த 16 நாமக்களை (ஷோடசம்) கூறினாலே போதும்.
ஒளஷதே சிந்தயேத் விஷ்ணும் போஜநே ச ஜனார்தனம் ( மருந்து உண்ணும் போது மகாவிஷ்ணுவையும், உணவு உண்ணும் போது ஜனார்தனனையும்)
சயனே பத்மநாபஞ்ச விவாஹே ச பிரஜாபதிம் ( படுத்து உறங்கும் போது பத்மநாபனையும், விவாகம் / திருமணம் செய்யும் போது ப்ரஜாபதியையும்)
யுத்தே சக்தரம்தேவம் ப்ரவாஹே ச த்ரிவிக்ரமம் ( போரிடும் போது சக்கரம் தரித்தவனையும், வெளியில் பிரவேசம் செய்யும் போது திரிவிக்ரமனையும்)
நாராயணம் தனுத்யாகே ஸ்ரீதரம ப்ரியசங்கமே (வில்லேந்தும் போது நாராயணனையும், பிரியமானவர்களை சந்திக்கும் போது ஸ்ரீதரனையும்)
துஸ்வப்னே ஸ்மரகோவிந்தம் ஸங்கடே மதுஸூதனம் (கெட்ட கனவு காணும் போது கோவிந்தானையும், சங்கடம் நேரும் போது மதுசூதனையும்)
காநரே நாரசிம்ஹஞ்ச பாவகே ஜலசாயினம் .( அடர்ந்த காட்டில் பிரவேசிக்கும் போது நரசிம்மனையும், அறியாமல் செய்யும் தவறின் போது நீரில் சயனித்தவனையும்)
ஜலமத்யே வராஹஞ்ச பர்வதே ரகுநந்தனம் (நீரின் மத்தியில் இருக்கும் போது வராகனையும், மலையேறும் போது ரகுநந்ததனையும்)
கமனே வாமனஞ் சைவ ஸர்வகாலேஷு மாதவம். ( தனியாக இடம் பெயர்கையில் வாமனரையும், எந்த காரியம் ஆற்றும் போதும் மாதவனையும் மனத்தில் இருத்தினால் போதும்.)
எனவே விஷ்ணுவை வணங்குவதால், சனியின் தீவிர பாதிப்பு விலகும்.
அர்த்தாஷ்டம சனி (எந்த ராசியாக இருந்தாலும் , சந்திரன் இருக்கும் இடத்திற்கு 4 ஆம் இடத்தில் சனியின் கோச்சார காலம்.)
கண்டக சனி ( எந்த ராசியாக இருந்தாலும் , சந்திரன் இருக்கும் இடத்திற்கு 7 ஆம் இடத்தில் சனியின் கோச்சார காலம்.)
ஏழரை சனி ( எந்த ராசியாக இருந்தாலும் , சந்திரன் இருக்கும் இடத்திற்கு 12, 1, 2 ஆம் இடத்தில் சனியின் கோச்சார காலம்.)
அஷ்டமத்து சனி ( எந்த ராசியாக இருந்தாலும் , சந்திரன் இருக்கும் இடத்திற்கு8 ஆம் இடத்தில சனியின் கோச்சார காலம்.)
மேலே கூறிய இடங்களில் சனியின் கோச்சார சனி வரும்போதெல்லாம் மகாவிஷ்ணுவை வணங்கினால், தொல்லைகள் விலகும், நல்லவை பெருகும்.
தொடர்புக்கு : 98407 17857
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...