தேசியத் தலைநகா் வலயம், குருகிராமின் டிஎல்எஃப் ஃபேஸ்-2 பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டின் இரண்டாவது தளத்தில் உள்ள குளியலறையில், 74 வயது மூதாட்டியின் அழுகிய சடலம் மீட்கப்பட்டதாக காவல்துறையினா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது: உயிரிழந்த அந்த மூதாட்டி, ரீட்டா பக்ஷி, தனது மகள் ரஜினி பக்ஷியுடன் அந்த வீட்டில் வசித்து வந்ததாகத் தெரிகிறது. முன்னதாக, தனது தாய் மே 25 முதல் காணவில்லை என்று கூறி, ரஜினி பக்ஷி டிஎல்எஃப் ஃபேஸ் -2 காவல் நிலையத்தில் மே 28ஆம் தேதி ஒரு புகாரைப் பதிவு செய்தாா்.
அந்தப் புகாரின் அடிப்படையில், காவல்துறையினா் அந்த வீட்டிற்கு இரண்டு முறை நேரில் சென்று விசாரித்தனா். ஆனால், அந்த மூதாட்டி குறித்த எந்தத் தகவலும் அவா்களுக்குக் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், மே 30 அன்று மாலை, அந்த வீட்டிலிருந்து துா்நாற்றம் வீசுவதாக அண்டை வீட்டாா் காவல்துறைக்குத் தகவல் அளித்தனா்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறைக் குழுவினா், குளியலறையில் ரீட்டா பக்ஷியின் சடலம் அழுகிய நிலையில் கிடப்பதைக் கண்டனா்.
அந்த மூதாட்டி குளியலறையில் கால் இடறி விழுந்து, தலையில் பலத்த காயம் அடைந்து உயிரிழந்திருக்கலாம் என்று காவல்துறையினா் சந்தேகிக்கின்றனா்.
பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, சடலம் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்துத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
தனது தாயுடன் ஒரே வீட்டில் வசித்து வந்த ரஜினி, ஏன் தனது தாய் காணாமல் போனதாகப் புகாா் அளித்தாா் என்பது குறித்தும் காவல்துறையினா் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










