பிஷ்னோய் சமூகத்தைச் சார்ந்த அம்ருதா தேவி எனும் பெண், 1787 ல் ஜோத்பூர் பிராந்தியத்தில் மரங்களை வெட்டுவதற்கு அரசர் உத்தரவு பிறப்பித்த போது, அந்த உத்தரவுக்கு எதிராகக் கடுமையாகப் போராடியவர்களில் ஒருவர். ஜோத்பூரில் அப்போது ராஜா அபய் சிங்கின் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. தனது உத்தரவை ஏற்க மறுத்த பிஷ்னோய்களின் மீது ராஜா கடும் ஆத்திரம் கொண்டார். அதனால் என்ன? அரசனே ஆனாலும் இயற்கையையும், வனவிலங்குகளையும் நிலைகுலையச் செய்யும்படியாக மரங்களை வெட்டுவது தவறு, அதற்கு நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம், மரங்களை வெட்டுவதை விட, எங்களை வெட்டுங்கள். என பிஷ்னோய் பெண்களும், ஆண்களுமாக ஏராளமானோர் மரங்களைச் சுற்றிச் சூழ்ந்து நின்று அவற்றைக் கட்டிப்பிடித்துக் கொண்டனர். இதைக் கண்டு வெகுண்டெழுந்த ராஜாவின் ஆட்கள் கொஞ்சமும் யோசிக்காமல் அரச உத்தரவை ஏற்று அவர்களை வெட்டிக் கொன்றனர். ஏறத்தாழ 363 பேர் அதில் உயிரிழந்தனர், அதில், அம்ருதா தேவி உட்பட 111 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.