ஏனெனில் இது ஒரு வாழ்வியல் நிதர்சனக் கதை. பலருக்கும் வாழ்வில் இப்படி நேர்ந்திருக்கலாம். இவள் தான் எதிர்கால மனைவி, இவன் தான் எதிர்காலக் கணவன் என்று குடும்பங்களுக்குள் ஒரு எதிர்பார்ப்புடன் பேசப்பட்டு, அந்த நம்பிக்கைகள் பிள்ளைகளின் மனதிலும் புகுத்தப்பட்டு விதி வசத்தால் அது பின்னர் நடக்காமல் போயிருக்கலாம். ஆனால் அந்தச் சிறு வயதில் மனதில் பதிந்து போன ‘பதின்ம வயது காதல்’ உணர்வுகள் மட்டும் பசுமரத்தாணி போல காலத்துக்கும் அழியாமல் பதிந்து போயிருக்கும். அதை எளிதில் எவருடனும் பகிர்ந்து கொள்ள முடியாவிட்டாலும் மனதோரம் ஒரு சிறு வலி இருந்து கொண்டே இருக்கும். அந்த வலி வாழ்நாள் முழுமைக்குமாக சுகமான சுமையாகத் தொடரலாம். வாசகர்கள் யாருக்கேனும் அப்படியான சுமைகள் இருந்தால் அதை வரப்போகும் காதலர் தினத்தை முன்னிட்டு சமூக வலைத்தளங்கள் வாயிலாக #இதுஎனதுபதின்மக்காதல் எனும் தினமணி ஹேஷ் டேக் மூலமாக இறக்கி வைக்கலாம்.