ஆனால், இந்த விஷயத்தில் ஒரு சில பெற்றோர்களின் கடுமையான அணுகுமுறைகளை நான் கண்கூடாகவே பார்த்திருக்கிறேன், தங்களது குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லாத சூழலிலோ, குழந்தைகள் சோர்வாக உணரும் தருணத்திலோ, அல்லது வீட்டில் உறவினர் அனைவரும் கூடி நிகழக்கூடிய சுபகாரியக் கொண்டாட்டங்களின் போதோ, சில சமயங்களில் ஊர் கூடி கொண்டாடும் திருவிழாக்காலங்களிலோ கூட அவர்களை விடுமுறை எடுத்துக் கொள்ள அனுமதிப்பதே இல்லை. இம்மாதிரியான நிர்பந்தங்கள், சம்மந்தப்பட்ட அந்தக் குழந்தைகள் மனதில் எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் எனச் சில பெற்றோர்கள் யோசித்துப் பார்ப்பதே இல்லை. 100% வருகைப்பதிவு மட்டுமே அவர்களது ஒரே இலக்காகி... தங்களது குழந்தைகளை ஆடுகளை மந்தைகளில் அடைப்பதைப் போல பள்ளிகளில் மட்டுமே பெரும்பான்மையான நேரங்களில் பிணைத்துக் கட்டி வைக்க விரும்புகிறார்கள். காரணம், 100% வருகைப்பதிவின் மீதான ஆசையைத் தாண்டி, வீட்டைக் காட்டிலும் பள்ளி பாதுகாப்பானது என்ற அடிப்படை உணர்வும் தான்.