நாளடைவில் அந்த வெறுப்பு நீறு பூத்த நெருப்பாகக் கனன்று ஒரு கட்டத்தில் மங்கல் பாண்டே’ எனும் இந்து வீரர் ஒருவரது தலைமையில் பெரும் கிளர்ச்சியாக வெடித்தது. மீரட்டில் தொடங்கிய இக்கிளர்ச்சி பின்னர் இந்தியாவின் பல இடங்களிலும், குறிப்பாக இந்தியாவின் மத்திய மலைப் பகுதிகளில், பரவியது. பொது மக்கள் பலரும் இக்கிளர்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டனர். இன்றைய உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், வடக்கு மத்தியப் பிரதேசம், டெல்லி, மற்றும் குர்க்காகான் ஆகிய இடங்களை மையமாகக் கொண்டிருந்தது. கிளர்ச்சியாளர்கள் பிரிட்டிஷ் படையினருக்கு ஒரு பெரும் சவாலாக விளங்கினர். ஜூன் 20, 1858 இல் குவாலியர் நகரின் வீழ்ச்சியுடன் இது முடிவுக்கு வந்தது. இக்கிளர்ச்சி "இந்தியாவின் முதலாவது விடுதலைப் போர்", அல்லது "சிப்பாய்க் கலகம்" எனவும் அழைக்கப்படுகிறது. சிலர் தென்னகத்தில் 1806 ஆ ஆண்டு வாக்கில் வேலூரில் வெடித்த சிப்பாய்க் கலகமே இந்திய விடுதலைக்கு வித்திட்ட முதல் புரட்சி முழக்கம் என்கிறார்கள். திப்புவின் வாரிசுகளை அதிகாரத்தில் அமர்த்தும் பொருட்டு அவரது விசுவாசிகளின் தூண்டலின் பேரில் வேலூரில் புரட்சி வெடித்தது. புரட்சிக்கு தூண்டுகோலாக அமைந்தது மீரட்டில் நடந்தது மாதிரியான இந்து, முஸ்லிம் உணர்வுகளைத் தூண்டும் விதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தோலாலான ஒரு தொப்பி. இந்தத் தொப்பிகளில் இந்துக்களுக்கு பசுக்கொழுப்பு தடவப்பட்ட தொப்பியும், முஸ்லிம்களுக்கு பன்றிக் கொழுப்பு தடவப்பட்ட தொப்பியும் வழங்கப்பட்டதாக கிளர்ச்சியாளர்கள் புரட்சியைத் தூண்டினர்.