/

பேக்கிங் உணவுகளால் என்னென்ன ஆபத்து?

அக்டோபர் 16 ஆம் தேதி 'உலக உணவு நாள்' குறித்து...

News image
கோப்புப்படம்- ENS
Updated On :19 அக்டோபர் 2024, 8:07 am

இணையதளச் செய்திப் பிரிவு

உணவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அனைத்து மக்களுக்கும் ஊட்டச்சத்துள்ள உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கிலும் ஆண்டுதோறும் அக்டோபர் 16 ஆம் தேதி 'உலக உணவு நாள்' கொண்டாடப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் அபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) 1945 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அதன்பின்னர் அக். 16 ஆம் தேதி உலக உணவு நாளாக அறிவித்து 1979 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.

உலகம் முழுவதும் உள்ள மக்கள் பசியின்றி இருக்க வேண்டும், அவர்களுக்குத் தேவையான உணவு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பதே இந்த நாளின் நோக்கம்.

இந்த ஆண்டின் கருப்பொருள் 'சிறந்த வாழ்க்கை மற்றும் சிறந்த எதிர்காலத்திற்காக உணவுக்கான உரிமை' என்பதாகும். அனைவருக்கும் ஊட்டச்சத்துள்ள உணவு பெறுவதற்கான உரிமை உள்ளது என்பதை இது வலியுறுத்துகிறது. மேலும் அனைவரும் தரமான உணவைப் பெற விவசாயம் முதல் வணிகம் வரை உள்ள பிரச்னைகளை சரிசெய்து முறையாக கட்டமைக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது.

உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு தகவலின்படி, 'உலகம் முழுவதும் 280 கோடி மக்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவு கிடைக்கவில்லை. இந்த ஊட்டச்சத்து குறைபாட்டினால் உடல் பருமன் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்தியுள்ளது' என்று கூறியுள்ளது.

பேக்கிங் உணவுகள்

உடல் ஆரோக்கியத்துக்காக ஊட்டச்சத்துள்ள காய்கறி, பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

மேலும் பேக்கிங் செய்யப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர்.

சாக்லேட்டுகள், பிஸ்கட்டுகள், குக்கீஸ், சாஸ், கேக்குகள், ஐஸ்க்ரீம், பீட்சா, பர்கர், சிப்ஸ் என பேக்கிங் செய்யப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் நிறமூட்டிகள், செயற்கை இனிப்புகள், பதப்படுத்தும் பொருள்கள் உள்ளிட்டவை சேர்க்கப்படுகிறது. இதனால் இந்த உணவுப் பொருள்கள் நீண்ட நாள்கள் கெடாமல் இருக்கும்.

ஆனால், இன்று குழந்தைகளுக்கு பெரும்பாலாக இந்த பாக்கெட் உணவுகளைத்தான் பெற்றோர்கள் வாங்கிக் கொடுத்து பழக்குகின்றனர்.

ஆபத்துகள்

பேக்கிங் உணவுகளில் செயற்கை உணவுப் பொருள்கள்/ரசாயனங்கள் சேர்ப்பதால் இதில் எந்த சத்துகளும் இருக்காது, இருந்தாலும் மிகக் குறைந்த அளவே இருக்கும்.

இதில் உப்பு, சர்க்கரை அதிகம் இருப்பதால் உடல் பருமன், ரத்த அழுத்தம் மற்றும் ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும்.

உடலில் கெட்ட கொழுப்புகள் அதிகம் சேரும்.

மேலும் வயிற்று உப்புசம், மலச்சிக்கல் என செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தும்.

பற்சிதைவு உள்ளிட்ட பல் பிரச்னைகளை ஏற்படுத்தும்.

அதிகபட்சமாக இதய நோய்கள், உடல் பருமன் உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.