/

லேடீஸ் ஸ்பெஷல்! வேண்டாத ரோமங்களை அகற்ற எளிமையான வழிகள்!

மஞ்சள் என்பது பெண்களுக்கே உண்டான மங்கல வஸ்துவாகும். பெண்களுக்கு மட்டும் அல்லாது பல மங்கல காரியங்களுக்கு மஞ்சள்தான் பிரதானப் பொருளாக விளங்குகிறது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 5:02 pm

மாலதி சந்திரசேகரன்

மஞ்சள் என்பது பெண்களுக்கே உண்டான மங்கல வஸ்துவாகும். பெண்களுக்கு மட்டும் அல்லாது பல மங்கல காரியங்களுக்கு மஞ்சள்தான் பிரதானப் பொருளாக விளங்குகிறது.

Story image

நிலத்தடி குறுஞ்செடி வகையைச் சேர்ந்த மஞ்சளானது உடல் ஆரோக்கியத்தைப் பேணி காப்பதுடன் உடல் அழகு, வனப்பு இரண்டிற்கும் வளம் சேர்க்கிறது. மஞ்சளில் மாங்கனீஸ், வைட்டமின் B6, இரும்புச் சத்து, பொட்டாசியம், புரதம், கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருப்பதால் உடலுக்கு ஊட்டச் சத்து கிடைப்பதென்னவோ உண்மை. இதை பால்ய வயது முதலே பெண்கள் உபயோகித்து வந்தால், தோலில் சுருக்கம் ஏற்படாது.

முக்கியமாக பெண்களின் சருமம் வழவழவென்று முடியில்லாமல் இருந்தால் தான் அழகாக இருக்கும். ஆனால், பல பெண்களுக்கு அப்படி இருப்பதில்லை. பிசுபிசுவென்று பூனை முடி போல் முகம், கை, கால்களில் காணப்படும். இன்னும் சொல்லப் போனால், முழங்காலுக்குக் கீழே கணுக்கால் வரை ரோமம் சுருண்டு சுருண்டு வளர்ந்திருக்கும். பள்ளி, கல்லூரியில் படிக்கும் பெண்கள் நாகரீக உடைகள் அணிந்து வெளியே செல்லும் பொழுது, இந்தக் கண்றாவியை மறைக்க அதிகப் பிரயத்தனப்பட வேண்டியிருக்கிறது. இன்னும் சொல்லப் போனால், வாரம் ஒரு முறை அழகு நிலயத்திற்குச் சென்று வேண்டாத ரோமங்களைக் கழிக்க அதிக அளவு பணத்தையும் செலவழிக்கிறார்கள். பணம் விரயமாவதுடன், சருமத்தில் பலவிதமான கெமிக்கல் கலந்த மெழுகுகளை உபயோகப் படுத்துவதால், சருமம் விரைவில் சுருங்கியும் விடுகிறது. 

Story image

ஒவ்வாமையால் பல தோல் வியாதிகள் உண்டாகின்றன. சிலர் விளம்பரங்களில் வரும் க்ரீம்களை உபயோகிக்கிறார்கள். அதை சருமத்தில் பூசி சில நிமிடங்கள் ஊறினால்தான் ரோமம் ஓரளவு அகலும். ஆனால், அதை அப்ளை பண்ணிக் கொண்டால் அதிலிருந்து வரும் ஒருவித மணம் இவர்தான் உபயோகிக்கிறார் என்பதை நன்கு காட்டிக் கொடுத்து விடும். அவமானத்தில் உபயோகிப்பவர்கள் புழு மாதிரி நெளிய வேண்டி இருக்கிறது.. இன்னும் சிலர் ரேசரை உபயோகிக்கிறார்கள். அப்படி உபயோகிப்பதால், சருமத்தில் சிகப்பு திட்டுக்கள் உண்டாவதுடன் தோலின் மிருதுத் தன்மையும் போய் விடுகிறது.

Story image

இந்த அவஸ்தையெல்லாம் இல்லாமல்,சுலபமாக வீட்டில் இருக்கும் மருத்துவ குணம் கொண்ட மஞ்சளை உபயோகப் படுத்தினால், மேற்சொன்ன தொல்லைகளுக்கு டாட்டா சொல்லி விடலாம். நல்ல பூச்சி இல்லாத மஞ்சளாக எடுத்து வெய்யிலில் காய வைத்து மிஷினில் கொடுத்து மஞ்சள் பொடியாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். அந்த மஞ்சளையும் சரியாகப் பயன்படுத்தினால்தான் எதிர்பார்க்கும் முடிவினைத்தரும். எப்படி பயன்படுத்துவது? இதோ சில முறைகள்.

அரை கப் பால், அரை கப் கடலை மாவு, இரண்டு டேபிள் ஸ்பூன் மஞ்சள் பொடி, ஒரு ஸ்பூன் உப்புத் தூள் இவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு கலந்து கொள்ளவும். அதை எடுத்து எங்கு தேவையோ அங்கு வட்ட இயக்கத்தில் நன்கு தடவவும். பதினைந்து நிமிடங்கள் காய்ந்த பின்பு வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவவும்.

அரை கப் சர்க்கரை, ஒரு கப் தண்ணீர், இரண்டு டேபிள் ஸ்பூன் மஞ்சள் பொடி, இரண்டு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு எடுத்துக் கொள்ளவும். தண்ணீரையும், சர்க்கரையையும் பிசுக்குத் தன்மை வரும் வரை  கொதிக்க விடவும். ஆறிய பின்பு, அதில் மஞ்சள் பொடி எலுமிச்சை சாறு இரண்டையும் சேர்த்து கெட்டியாகும் வரை கிளறவும்.தேவையான இடத்தில் வட்ட இயக்கத்தில் தடவவும். ஐந்து நிமிடங்கள் கழித்து கழுவவும். வாரத்திற்கு மூன்று தடவை செய்தால் நல்ல பலன் இருக்கும்.

Story image

இரண்டு ஸ்பூன் பால், ஒரு டேபிள் ஸ்பூன் கடலை மாவு, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் இவற்றை பேஸ்ட் போல குழைத்துக் கொள்ளவும்.முடி எந்த வாட்டத்தில் வளர்ந்து இருக்கிறதோ அதே வாட்டத்தில் குழைவைப் பூசவும். சிறிது நேரத்தில், முடி வாட்டத்தின் எதிர்ப்புறமாக வழித்து எடுக்கவும்.கடலை மாவிற்குப் பதில் ஓட்ஸ் மாவைக் கூட பயன்படுத்தலாம்.

ஒரு கப் கொண்டைக்கடலை மாவு, அரை கப் பால், அரை ஸ்பூன் மஞ்சள் தூள் இவற்றை சேர்த்துக் குழைத்து, முடி வளர்ந்த வாட்டத்திலேயே அப்ளை பண்ணவும். இருபத்தைந்து நிமிடங்கள் காய்ந்த பின், மெல்லிய துணி கொண்டு எதிர்பக்கமாக தேய்த்து எடுக்கவும். வெதுவெதுப்பான தண்ணீரில் அந்த இடத்தைக் கழுவவும்.

மூன்று ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் பால் இரண்டையும் கலக்கவும்.இதில் அளவுகள் சற்று முன்னுக்குக்குப் பின் இருந்தால் பரவாயில்லை. கலந்ததை தேவையான இடத்தில் வட்ட இயக்கத்தில் தடவவும்.இருப்பது நிமிடங்கள் ஊறவும். பின்பு மிதமான சூடு உள்ள நீரில் கழுவவும்.

Story image

மஞ்சளை உபயோகப் படுத்தப்படுத்த சருமம் பொலிவுடன் இருக்கும். கிருமி நாசினியாக மஞ்சள் செயல் படுவதால் சரும வியாதிகள் எளிதில் அண்டாது. அதனால் முடிந்தவரை மேற்சொன்ன பேக் முறையை செய்து கொண்டு தேவைப்படாத ரோமங்களை ஈசியாக கழித்து விடுங்கள். அப்புறம் பாருங்கள். 'மஞ்சள் முகமே வருக. மங்கல விளக்கே வருக' என்று உங்களவர் உங்களை பார்த்து பாடத் தொடங்கி  விடுவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.