அங்கித்தைப் பொருத்தவரை அவரது ஏரியாவாசிகளுக்கு அவர் ஒரு செல்லப்பிள்ளையாகத் தான் வலம் வந்திருக்கிறார். 23 வயது இளைஞர், கலகலப்பானவர், புகைப்படக்காரர், தலைமுடியை சற்று நீளமாக வளர்த்துக் கொண்டு துறுதுறுப்பாக காலனியில் திரிந்தகாரணத்தால் அவருக்கு ‘மோக்லி’ என்ற பட்டப்பெயரும் உண்டாம். சம்பவ தினத்தன்று சஹானா, அங்கித்தை தனது வீட்டுக்கு அருகிலுள்ள ஓரிடத்தில் வந்து காத்திருக்கச் சொல்லி இருக்கிறார். அப்படிச் செய்யச் சொல்லி அவரை அவரது குடும்பத்தார் வற்புறுத்தி இருக்கிறார்கள். பின்பு சஹானாவை அடித்து, மிரட்டி அறைக்குள் வைத்துப் பூட்டி விட்டு, சஹானாவுக்காகக் காத்திருந்த அங்கித்தை பின்னாலிருந்து தாக்கி தடுமாறி விழச்செய்து கழுத்தறுத்துக் கொன்றிருக்கிறார்கள். கொலை நடந்த இடம் அங்கித்தின் வீட்டுக்கு மிக அருகில் இருந்த பகுதி தான். தமிழில் சசிக்குமார் இயக்கத்தில் சுப்ரமண்யபுரம் என்றொரு திரைப்படம் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்து பெரிய வெற்றி பெற்றது. கிட்டத்தட்ட அதே ஸ்டைலில் காதலிக்கும் பெண்ணை விட்டே காதலனை ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு வரச்செய்து, அவனைக் கழுத்தறுத்துக் கொன்ற கொடூரம் புது டெல்லி, ரகுபீர் நகர் வளாகத்தையே தற்போது அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.