/

சங்ககிரி மலை: சிதிலமடைந்துள்ள படிக்கட்டு, மண்டபங்கள்

மலை உச்சிக்கு செல்லும்  வழியில் உள்ள படிக்கட்டுகள், பழமை வாய்ந்த   மண்டபங்கள் சிதிலமடைந்துள்ளன அதனை செப்பனிட வேண்டுமென பக்தர்கள் தொல்பொருள்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.  

News image
சங்ககிரி மலைக்கு செல்லும் வழியில் சிதிலமடைந்துள்ள 6வது கோட்டை ரொக்க திட்டி வாசல் மண்டபம்
Updated On :27 ஜனவரி 2024, 5:34 pm

எஸ்.தங்கவேல்

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி மலை மீது உள்ள அருள்மிகு ஆஞ்சநேயர் சுவாமி, சென்னசேகவப்பெருமாள், இஸ்லாமியர்கள் வழிப்படக்கூடிய தர்கா ஆகிய வழிபாட்டு தலங்கள் உள்ளன.  மலை உச்சிக்கு செல்லும்  வழியில் உள்ள படிக்கட்டுகள், பழமை வாய்ந்த மண்டபங்கள் சிதிலமடைந்துள்ளன. அதனை செப்பனிட வேண்டுமென பக்தர்கள் தொல்பொருள்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.  

சங்ககிரி மலையானது நிலப்பரப்பிலிருந்து 1,500 அடி உயரம் கொண்டது. சங்ககிரி மலையின் உச்சி பகுதிக்கு செல்ல பத்து நுழைவு வாயில்கள் உள்ளன. 10வது வாயிற்பகுதிக்கு அடுத்தாற்போல் அருள்மிகு ஆஞ்சநேயர், சென்னசேகசவப்பெருமாள் கோவில்கள் மற்றும் அதன் கீழ் பகுதியில் இஸ்லாமியர்கள் வழிபடக்கூடிய தர்காவும் உள்ளன. 

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இந்த தர்காவுக்கு இஸ்லாமியர்கள் வந்து சிறப்பு தொழுகை நடத்தி சென்று வருகின்றனர்.  அதனையடுத்து  ஒவ்வொரு வாரம் சனிக்கிழமையன்றும் சித்திரை, புரட்டாசி மாதங்களில் சங்ககிரியை சுற்றியுள்ள அனைத்து கிராமப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மலைக்கு சென்று அருள்மிகு சென்னசேகவப்பெருமாளை வழிபட்டு மலையிலேயே பொங்கல் வைத்து குடும்பத்துடன் வழிபட்டுச் சென்று வருகின்றனர்.  

Story image

சங்ககிரி மலைக்கு செல்லும் வழியில் சிதலமடைந்துள்ள படிக்கட்டுகள்.

மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு கோட்டை மாரியம்மன், வரதராஜபெருமாள் கோவில்கள், நாகர் சுவாமி, குடைவரை விநாயகர், கோட்டை மாரியம்மன் கோவில்களிலும் பக்தர்கள் சுவாமிகளை தரிசனம் செய்து வருகின்றனர்.  

இக்கோவிலை அடுத்து மலை உச்சிக்கு செல்லும்பாதையானது வருடத்திற்கு வருடம் சிதலமைடந்து வருகின்றன. பாதைகள் செப்பனிடாததால் மழைகாலங்கள் முடிவுற்ற பின்னர் ஒரு படிக்கட்டுக்கும் மற்ற படிக்கட்டுகளுக்கும் உள்ள இடைவெளி அதிகரித்து ஏறமுடியாத நிலையில் உள்ளன.  ஒவ்வொரு மண்டபங்களும் வருடத்திற்கு வருடம் சரிந்து வருகின்றன. சங்ககிரி மலை தொல்பொருள்துறையின் கீழ் பராமரிக்கப்படுகின்றன. 

கடந்த சில வருடங்களாக மலைக்கு செல்லும் பாதைகள் களர் செடிகள் வளர்ந்து மலைக்கு செல்ல இயலாத நிலையில் இருந்தன. கடந்த சில தினங்களாக பல தன்னார்வ தொண்டர்கள் களர் செடிகளை அகற்றினர். அதனையடுத்து பக்தர்கள் மலைக்கு சென்று வருகின்றனர். தன்னார்வ தொண்டர்களை பக்தர்கள் பாராட்டினர்.  மேலும் அதிகமாக வளர்ந்துள்ள கருவேலம் மரங்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

எனவே மலைக்கு செல்லும் வழியில் சிதிலமடைந்துள்ள படிக்கட்டுகள், மண்டபங்களை செப்பனிட்டும், அதிகமாக வளர்ந்துள்ள கருவேலம் மரங்களை அகற்ற வேண்டுமென தொல்பொருள்துறையினர் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Story image

சங்ககிரி மலைக்கு செல்லும் வழியில் சிதலமடைந்துள்ள 6வது கோட்டை ரொக்க திட்டி வாசல் மண்டபம்

இது குறித்து சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட் நிறுவனர் எ.ஆனந்தகுமார் கூறியதாவது: 

சங்ககிரி மலையானது தமிழ்நாட்டில் உயரமான மலையாகும். மலையின் உச்சியில் அருள்மிகு ஆஞ்சநேயர், சென்னகேசவ பெருமாள் கோவிலும், தர்காவும் உள்ளன. 

சுவாமிகளை வழிபட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து தினசரி சுமார் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள், சுற்றுலா பயணிகளும், ஒவ்வொரு வெள்ளி, சனிக்கிழமைகளில் பக்தர்களும் வந்து செல்கின்றனர். மலை உச்சிக்கு செல்லும் படிக்கட்டுகள், மலைக்கு செல்லும் பக்தர்கள் அமர்ந்து இளைப்பாற மண்டபங்களை பயன்படுத்தி வருகின்றனர்.  

தற்போது மலையில் படிக்கட்டுகள் சிதலமடைந்தும், தொடர்ந்து மழை பெய்து வருவதால் மழை நீரால் மேலும் ஒரு படிக்கட்டுக்கும் மற்றொரு படிகட்டுக்கும் இடையே மண் கரைந்து பக்தர்கள் ஏற முடியாத அளவிற்கு இடைவெளி அதிகரித்து வருகின்றன. மண்டபங்களைச் சுற்றிலும் களர்செடிகள் வளர்ந்து மண்டபத்தில் உள்ள கற்கள் சரிந்து வருகின்றன. 

எனவே, மேலும் படிகட்டுகள், மண்டபங்களைச் தொல்பொருள்துறையினர் போர்கால அடிப்படையில் செப்பனிட்டால் அடுத்து வரும் சந்ததியினருக்கு பழமையான நினைவுச்சின்னங்களை விட்டுச்செல்ல முடியும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.