நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

தேசிய பேரிடர் மீட்புக்குழுவின் படைகள் கூடுதலாக கேரளாவுக்கு அனுப்பிவைப்பு : ராஜ்நாத்சிங்

கேரளாவில் கனமழை நீடித்து வருவதால், தேசிய பேரிடர் மீட்புக்குழுவின் படைகள் கூடுதலாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக மத்திய

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:31 pm

ANI


புதுதில்லி: கேரளாவில் கனமழை நீடித்து வருவதால், தேசிய பேரிடர் மீட்புக்குழுவின் படைகள் கூடுதலாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 

கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கேரளாவில் கனமழை நீடித்து வரும் நிலையில், அங்கு மழை தொடர்பான சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்தது. வெள்ளம் சூழ்ந்திருப்பதால் கொச்சி விமான நிலையம் 18-ந் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. .

இன்று காலை ஏற்பட்டுள்ள நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு போன்ற பாதிப்புகளால் கண்ணூர், வயநாடு, கோழிக்கோடு மாவட்டங்களின் பல பகுதிகள் துண்டிக்கப்பட்டு உள்ளன. சுற்றுலாத்தலமான மூணாறு பகுதி துண்டிக்கப்பட்டு தீவு போல காணப்படுகிறது.

மின்சாரம், சாலைகள் துண்டிப்பு, தண்டவாளங்களில் நிலச்சரிவு போன்ற இடையூறுகளால் பஸ், ரெயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. எர்ணாகுளத்தில் இருந்து 23 ஆயிரம் பேர் உள்பட 1 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கான உணவு மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் அதிகாரிகள் அவதிப்படுகின்றனர்.

மாநிலத்தில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக கூடுதல் ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர், கேரளாவுக்கு விரைந்துள்ளனர். குறிப்பாக இடுக்கி, ஆலுவா பகுதிகளில் சென்னை ரெஜிமென்டின் 2 படைப்பிரிவினர் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இதைப்போல கண்ணூர், வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம் போன்ற மாவட்டங்களுக்கும் ராணுவ வீரர்கள் கூடுதலாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேரள முதல்வர் பினராயி விஜயனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலவரம் குறித்து கேட்டறிந்தனர். அப்போது அவர், ‘இந்த நெருக்கடி நேரத்தில் மத்திய அரசு, கேரள மக்களுடன் உறுதியாக நிற்கும். மாநிலத்துக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்வதற்கு தயாராக இருக்கிறோம்’ என்று உறுதியளித்தனர். 

இந்நிலையில், தேசிய பேரிடர் மீட்புக்குழுவின் படைகள் கூடுதலாக கேரளாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ராஜ்நாத்சிங் டுவிட்டர் பக்க பதிவில் தெரிவித்துள்ளார். மேலும் கேரள அரசுக்குத் தேவையான மீட்புப் பணிகளுக்கான அனைத்து உதவிகளை மத்திய அரசு செய்து வருகிறது என்றும் கேரள மாநில அரசுடன் மத்திய அரசு தொடர்ந்து தொடர்பில் இருக்கிறது என தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.