/

சுங்கச்சாவடிகள் அகற்றம்: மத்திய அரசின் அறிவிப்பு ஏமாற்று வேலை: லாரி உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

சுங்கச்சாவடிகள் அகற்றப்பட்டதாக மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு ஏமாற்று வேலை என்று லாரி உரிமையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:59 am

பெ. விஜயபாஸ்கர்

சுங்கச்சாவடிகள் அகற்றப்பட்டதாக மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு ஏமாற்று வேலை என்று லாரி உரிமையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் கே.நல்லதம்பி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் உள்ள 293 சுங்கச்சாவடிகளில் 62 சுங்கச்சாவடிகள் அகற்றப்பட்டுள்ளதாக மத்திய சாலைப்போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நாமக்கல் மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் சுங்கச்சாவடிகள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நாமக்கல் சுங்கச்சாவடி, பரமத்தி அருகே ஓவியம்பாளையம் என்ற இடத்தில் கடந்த 1992 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அந்த சுங்கச்சாவடி நாமக்கல் வட்ட லாரி உரிமையாளர்கள் சங்கம் மூலம் டெண்டர் எடுக்கப்பட்டு அரசுக்கு ரூ.1 கோடி செலுத்தப்பட்டது. 7 ஆண்டுகள் நடத்தப்பட்டு 1999-ல் அந்த சுங்கச்சாவடி அகற்றப்பட்டுவிட்டது. அந்த இடத்தில் ஒரு சுங்கச்சாவடி இருந்தது என்பது, இப்போது பலருக்கும் தெரியாது.

இதுபோல் தூத்துக்குடி-திருநெல்வேலி சாலையில் மணிமுத்தாறு பாலத்தில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு முன்பே அகற்றப்பட்டது.10 ஆண்டுகளுக்கு முன்பு அகற்றப்பட்ட சுங்கச்சாவடிகளை இப்போது அகற்றியதுபோல் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது, பொதுமக்களை ஏமாற்றும் செயல். மேலும் இந்த அறிவிப்பால் நாமக்கல் மாவட்ட மக்கள் நாமக்கல்-கரூர் நான்கு வழிச்சாலையில் கீரம்பூரில் உள்ள சுங்கச்சாவடி அகற்றப்படும் என்று நம்பிக்கொண்டிருக்கின்றனர்.

மத்திய அரசின் இந்த ஏமாற்று வேலையை லாரி உரிமையாளர்கள் சம்மேளன வன்மையாக கண்டிக்கிறது. இதுகுறித்து பிரதமருக்கு கடிதம் அனுப்பபட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.