விருதுநகர் அருகே கோவிலாங்குளம் வேளாண் அறிவியல் நிலையத்தில் அம்மா பண்ணை மகளிர் மற்றும் உணவு பாதுகாப்பு குழுக்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் செவ்வாய்கிழமை நடைபெற்றது. இதில், ஆட்சியர் வே.ராஜாராமன் பங்கேற்று பயிற்சி முகாமை தொடங்கி வைத்து பேசுகையில், தமிழக முதல்வர் மகளிர் மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதில், அம்மா பண்ணை மகளிர் குழு அமைத்தும், அவர்களுக்கு குழு அமைப்பு, நிர்வாக செயல்பாடுகள் தொடர்பான விரிவாக பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
வேளாண் விளை பொருள்களான கம்பு, சோளம், குதிரைவாலி, திணை போன்ற சிறுதானியங்களை கொண்டு செயற்கை ரசாயணங்களை தவிர்த்து இயற்கையான முறையில் கார வகைகள், பிஸ்கட் வகைகள், இனிப்பு வகைகள் தயாரித்து அவற்றை அதிக அளவில் உற்பத்தி செய்து சந்தைப்படுத்தி வருமானம் ஈட்டுவது குறித்தும் பயிற்சியும் வழங்கப்படுகிறது.
அதேபோல், நவீன முறையில் செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள் வளர்ப்பு, கறவை மாடுகள் வளர்த்து பால் சம்பந்தமான மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரித்தல், கோழிப்பண்ணைகள் அமைத்தல், பண்ணைக் கழிவுகளை கொண்டு மண்புழு உரம் தயாரித்தல், காளான் வளர்த்தல், காய்கறி பயிர்களில் துல்லியம் பண்ணையம் அமைத்து அதிக வருவாய் ஈட்டுவது தொடர்பாக பயிற்சி அளிக்கப்படுகிறது. எனவே இம்முகாமில் பண்ணை மகளிர் குழுக்கள் பங்கேற்று சிறந்த முறையில் பயிற்சி பெற்று வேளாண் தொழில்கள் சார்ந்த தொழில்கள் தொடங்கி அதிக வருவாயை ஈட்டி தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
இப்பயிற்சி முகாமில் வேளாண் துறை இணை இயக்குநர் சுப்பையா, வேளாண் அறிவியல் நிலைய தலைவர் மற்றும் பேராசிரியர் வே.பால்பாண்டி, உழவர் பயிற்சி நிலைய துணை இயக்குநர் செண்பகராஜ், வேளாண் திட்ட வணிக அலுவலர் முத்துமுனியாண்டி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர்(பொறுப்பு) ராதாகிருஷ்ணன் மற்றும் பண்ணை மகளிர் குழுவினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை அருப்புக்கோட்டை வேளாண் உதவி இயக்குநர் மணிசேகரன், காரியாபட்டி வேளாண்மை உதவி இயக்குநர் சுந்தரமகாலிங்கம் ஆகியோர் செய்திருந்தனர்.