விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் பகுதியில் பருவ கால மாற்றத்தினால் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதுவரையில் ராஜபாளையம் பகுதியில் 10 பேரும், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் 2 பேரும் என மொத்தம் 12 சிறுவர், சிறுமிகள் மர்ம காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளனர். இதைத் தொடர்ந்து அப்பகுதியில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு தீவிர தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், ராஜபாளையம் பகுதியில் மட்டும் ஒவ்வொரு வார்டுக்கும் தலா 5 பேர் கொண்ட மருத்துக்குழுவினர் நியமிக்கப்பட்டு வீடுகள் தோறும் சென்று சிகிச்சை மற்றும் கொசுக்களை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியிலும் முகாமிட்டு சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இப்பகுதியில் என்ன காரணத்தினால் மர்ம காய்ச்சல் பரவுகிறது என்பது குறித்து உயர்நிலை மருத்துவக்குழுவினர் ஆய்வு செய்து தடுப்பதற்கான வழிமுறைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.