விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சார்நிலைக்கருவூலங்களில் நேர்காணலுக்கு வராமலும் மற்றும் வாழ்நாள் சான்றிதழ் அளிக்காத ஓய்வூதியதாரர்கள் வருகிற 25-ம் தேதிக்குள் அளிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆட்சியர் வே.ராஜாராமன் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம்: மாவட்ட கருவூலம், அனைத்து சார்நிலை கருவூலகங்களில் ஓய்வூதியம் பெறும் அனைத்து ஓய்வூதாரர்களின் விவரங்களை அளிப்பதற்கு கடந்த ஏப்ரல் முதல் ஜூலை மாதம் இறுதி வரையில் நேர்காணல் வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது.
இதுவரையில் வாழ்நாள் சான்றிதழ்களை அளிக்காத ஓய்வூதியதாரர்கள் வருகிற 25-ம் தேதி வரையில் மீண்டும் நேர்காணலுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இதிலும், பங்கேற்று விவரங்களை அளிக்காதவர்களுக்கு அடுத்த மாதம் முதல் ஓய்வூதியம் நிறுத்தப்படவும் உள்ளது.
அதனால், நேர்காணலுக்கு வர முடியாதவர்கள் குறிப்பிட்ட நாள்களுக்குள் அரசு மருத்துவர் மூலம் உரிய வாழ்வுரிமை சான்று பெற்று அளிக்கவும் வேண்டும். புதிய மருத்துவ ஓய்வூதியர் நல காப்பீட்டுத் திட்டத்திற்கு உரிய விண்ணப்பத்தினை, இதுவரையில் கருவூலத்தில் அளிக்காதவர்கள் நேரில் சென்று உடனே விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் வேலைநாள்களில் கருவூலத்திற்கு வந்து அடையாள அட்டையை பெற்றுக்கொண்டு பயனடையும்மாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.