எதிர்க்கட்சிகளுக்கு தேர்தல் தயாரிப்புக்கு வாய்ப்புகொடுக்கக் கூடாது என்ற நோக்கத்துடன் தேர்தல் தேதி அறிவித்த கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி அன்றே,வேட்புமனுத்தாக்கல் துவங்கிடும் என அறிவித்தது. இது ஜனநாயக நடைமுறைக்கு எதிரானது. வேட்புமனுத்தாக்கல் செய்கிற போது, புதுக்கோட்டை உள்ளிட்ட பல இடங்களில் எதிர்க்கட்சி வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கலே செய்ய விடாமல் ஆளுங்கட்சியினர் அராஜகம் செய்தனர். வேட்புமனுத்தாக்கல் செய்த பல இடங்களில் எதிர்கட்சியினரின் மனுக்கள், ஆளுங்கட்சியினரின் நிர்ப்பந்தத்தால் மோசடியாக நிராகரிக்கப்பட்டன.திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியம் வார்டு கவுன்சிருக்கான தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரின் வேட்புமனு முறைகேடாக நிராகரிக்கப்பட்டதை எதிர்த்துப் போராடியதால் அந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், மற்ற பல இடங்களில் ஆளுங்கட்சியின் அராஜகமும், மோசடியுமே நடந்தேறியது.