சேலம் சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல்: அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு


சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு தனி வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வரும் நிலையில், பொதுமக்களுக்கு காய்ச்சல் பரவி வருகிறது. அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு காய்ச்சலுக்கு சிகிóச்சை பெற வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் டெங்கு அறிகுறிகளுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தன. அதன் முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை வந்துள்ளன.
அதில், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வரும் கருப்பூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் (8) என்ற சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியாகி உள்ளது.
தொடர் காய்ச்சல் காரணமாக அரசு மருத்துவமனையில் கடந்த 23-ம் தேதி தமிழ்ச்செல்வன் அனுமதிக்கப்பட்டிருந்தார். டெங்கு இருப்பது உறுதியான நிலையில் சிறுவன் தனி வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் மோகன் கூறும்போது, சிறுவனுக்கு டெங்கு இருப்பது உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நிலை இப்போது சீராக உள்ளது. சிறுவனின் வீட்டில் உள்ள மேலும் 3 குழந்தைகள், அவரது பெற்றோருக்கும் ரத்தப் பரிசோதனை நடத்தப்பட்டது. இருப்பினும் அவர்களுக்கு டெங்கு அறிகுறிகள் இல்லை என்று தெரிய வந்துள்ளது.
காய்ச்சல் அறிகுறிகளுடன் இருக்கும் பொதுமக்கள், மருந்துக் கடைகளுக்குச் சென்று மருந்து மாத்திரை வாங்கிச் சாப்பிடாமல், மருத்துவமனைகளுக்குச் சென்று மருத்துவர்களை கலந்தாலோசிக்க வேண்டும். மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் மட்டுமே மருந்துகளைச் சாப்பிட வேண்டும். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நில வேம்பு கசாயம் சிறந்த மருந்து என்றார் அவர்.
இது தொடர்பாக சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ஜெகதீஸ்குமார் கூறும்போது, சேலம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் இருப்பதால் பொதுமக்கள் தங்களது சுற்றுப் புறங்களில் கொசுக்கள் பெருக்கம் ஏற்படாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
சேலம் மாவட்டத்தில் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளில் சுமார் 750 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். டிசம்பர் மாதம் வரையிலும் கொசு ஒழிப்பு சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். பொதுமக்கள் குடிநீரை காய்ச்சிய பிறகே குடிக்க வேண்டும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...