/

விருதுநகர் மாவட்டத்தில் கண்மாய் நீரை பயன்படுத்துவோர் சங்களுக்கான தேர்தல்

விருதுநகர் மாவட்டத்தில் நீர்வள நிலவள திட்டத்தின் சார்பில் காயல்குடியாறு உபவடி நிலத்தில் நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களுக்கான தலைவர் மற்றும் ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர்களுக்கான

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:48 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் நீர்வள நிலவள திட்டத்தின் சார்பில் காயல்குடியாறு உபவடி நிலத்தில் நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களுக்கான தலைவர் மற்றும் ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகிற 20ம் தேதி நடைபெற இருக்கிறது.

இது குறித்து ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

இம்மாவட்டத்தில் காயல்குடியாறு உபவடிநிலத்தில் உள்ள 13 நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களுக்கான தேர்தல் குறிப்பிட்ட நாளில் நடத்தப்பட இருக்கிறது. எனவே இச்சங்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலராக விருதுநகர் உதவி ஆணையர்(கலால்) கூ.பழனியாண்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார். உதவி தேர்தல் அலுவலராக அந்தந்த பாசன அமைப்புகளுக்கு தொடர்புடைய வருவாய் வட்டாட்சியர்கள் பின்வருமாறு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலப்பாட்டம் கரிசல்குளம், செட்டிக்குளம், கொத்தங்குளம் மற்றும் சித்தர்குளம் ஆகிய நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களின் தேர்தல் நடத்தும் உதவி அலுவலராக ராஜபாளையம் வட்டாட்சியர் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், திருமாலை வணங்கினான், இடையன்குளம், படிக்காசுவைத்தான்பட்டி, பிள்ளையார்குளம், வேப்பங்குளம், வடகரை சிறுகுளம் ஆகிய கண்மாய் நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களின் தேர்தல் நடத்தும் அலுவலராக ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியரும், நதிக்குடி சிறுகுளம், நதிக்குடி செவல்குளம், கோபாலசமுத்திரம் ஆகிய கண்மாய் நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களின் தேர்தல் நடத்தும் அலுவலராக சிவகாசி வட்டாட்சியரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எனவே இத்தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ள மேற்படி பாசன அமைப்புகளின் நீரினை பயன்படுத்தும் வாக்காளர்கள், தொடர்புடைய வட்டாட்சியர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வருகிற 9-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். இதையடுத்து வருகிற 10ம் தேதி அன்று இறுதி செய்யப்பட்டு, போட்டி நிலவுகிற சங்கங்களுக்கு வரும் 20ம் தேதி காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணிவரையில் வாக்கு பதிவு நடத்தப்படும். அதேபோல், அன்றைய நாளிலேயே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகளும் அறிவிக்கப்பட இருக்கிறது.

எனவே இத்தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்கள், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள நில உடைமையாளர்கள் வருகிற 9ம் தேதி தொடர்புடைய உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனுத்தாக்கல் செய்து பயனடையலாம் என ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.