விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த சங்கரலிங்காபுரம் கிராமத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதர இயக்கம் சார்பில் ஊராட்சி அளவிலான மகளிர் கூட்டமைப்புகளுக்கான எழுத்தறிவு பயிற்சி தேர்வு முகாம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு ஊரக வாழ்வாதர இயக்கம் சார்பில் ஊராட்சி அளவிலான சிறந்த மகளிர் கூட்டமைப்பு தேர்வு செய்யப்பட்டு ஆண்டுதோறும் பரிசு வழங்கப்படுகிறது. அதில் உறுப்பினர்கள் அனைவரும் எழுத படிக்க தெரிந்தவர்களாக இருக்க வேண்டும். அதன் அடிப்படையில் இக்கிராமத்தி்ல் உள்ள மகளிர் கூட்டமைப்புகளி்ல 38 பேர் வரையில் எழுத்தறிவு பெறாதவர்களாக இருந்தனர்.
இவர்களுக்கு கடந்த ஒரு மாதமாக எழுத்தறிவு பயிற்சி அளிக்கப்பட்டது. இவர்களுக்கான எழுத்தறிவு தேர்வு முகாம் அக்கிராமத்தில் உள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்றது. இந்த முகாமிற்கு ஊராட்சித் தலைவர் சொக்கப்பன் தலைமை வகித்தார். ஊராட்சி செயலாளர் ஜெயசங்கரன் முன்னிலை வகித்தார். இதில், தொடக்கப்பள்ளி ஆசிரியர் ராமகிருஷ்ணன், களப்பணியாளர் லலிதாதேவி ஆகியோர் பங்கேற்று மகளிர் சுய உறுப்பினர்களுக்கு தேர்வு நடத்தி மதிப்பீடு செய்தனர்.