திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் அருகே லாரியை முந்திச்செல்ல முயன்ற வேனும், எதிரே வந்த அரசுப் பேருந்தும் மோதிக்கொண்டதில் ஐயப்ப பக்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பேருந்தில் பயணித்த 22 பேர் பலத்த காயமடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம்,கீரனூர் அருகேயுள்ள உப்பியங்குடி பகுதியைச் சேர்ந்தவர் குமரேசன் (22). வேன் ஓட்டுநர். சபரிமலை கோயிலுக்குச் செல்ல மாலை அணிந்திருந்த இவர், ஞாயிற்றுக்கிழமை இரவு திருச்சியிலிருந்து உப்பியங்குடிக்கு தனது வேனை ஓட்டிச் சென்றார்.
பாரதிதாசன் பல்கலைக்கழகம் அருகே சென்ற போது முன்னால் சென்றுகொண்டிருந்த லாரியையும், வேனையும் முந்திச் செல்ல அவர் தனது வேனை இடதுபக்கம் திருப்ப முயன்றார்.
அப்போது அறதாங்கிலியிருந்து திருச்சி நோக்கி வந்த அரசுப் பேருந்து வேன் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே குமேரசன் உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த நவல்பட்டு போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தையும், பேருந்தினுள் பலத்த காயத்துடன் சிக்கியிருந்தவர்களையும் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.