நாமக்கல் மாவட்டம், மோகனூரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பிரகாஷின் மனைவி லட்சுமி (33). பிரசவத்துக்காக நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி சேர்க்கப்பட்டார். அவருக்கு அன்று பிற்பகல் அறுவைச் சிகிச்சை மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது. அதே நாள் மாலையில் அதிகளவில் ரத்தப் போக்கு ஏற்பட்டு லட்சுமி உயிரிழந்தார். இச்சம்பவத்துக்கு அரசு மருத்துவர்கள், செவிலியர்களின் கவனக்குறைவே காரணம் என தெரிவித்த பிரகாஷ், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதுடன் இரட்டை ஆண் குழந்தைகளைப் பெற்றுச் செல்லவும் மறுத்துவிட்டார்.