அதன் அடிப்படையில் சென்னை, சேலம், மதுரை, கோவை ஆகிய இடங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் விசாரணை நடத்தப்படுகிறது. மேலும் சேலத்தில் கைதான தங்கவேலுவின் மகன், மருமகள் ஆகியோரிடம் தனிப்படை காவல்துறையினர் சனிக்கிழமை விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணைக்கு வரவழைக்கப்பட்ட அவர்கள் இருவரும் மருத்துவர்கள் என்று கூறப்படுகிறது. விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தங்கவேல், வரும் ஜூலை 12-ம் தேதி வரையிலும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சில இடைத்தரகர்கள், மருத்துவர்கள், சிறுநீரக தானம் பெற்றவர்களிடமும் விசாரணை தீவிரமாக நடைபெறுகிறது. இதையடுத்து அவர்களும் கைது செய்யப்பட உள்ளனர்.இதைத் தொடர்ந்து சிறுநீரக தானத்துக்கு ஒப்புதல் அளித்த கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், வட்டாட்சியர்கள் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது. நெருங்கிய உறவுகளுக்கு இடையேயான உறுப்பு தானம் எளிமையான சட்ட நடைமுறைகளுடன் நிறைவடையும் அதே நேரத்தில் முன் பின் அறிமுகம் இல்லாதவர்களிடையே உறுப்பு தானம் பெறுவது கடுமையான சட்டங்கள், விதிகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.