/

ஈரோடு: 80 அடி சாலையில் நெடுஞ்சாலைத்துறை செயலர் திடீர் ஆய்வு

ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள 80 அடி சாலை திட்டம் தொடர்பாக தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறை செயலர் நிரஞ்சன் மார்டி புதன்கிழமை திடீரென ஆய்வு செய்தார்.

News image
Updated On :2 ஜனவரி 2024, 7:44 pm

ஜெபலின்ஜான்

ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள 80 அடி சாலை திட்டம் தொடர்பாக தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறை செயலர் நிரஞ்சன் மார்டி புதன்கிழமை திடீரென ஆய்வு செய்தார்.

 ஈரோட்டுக்கு புதன்கிழமை வந்த அவர், மாவட்ட ஆட்சியர் வே.க.சண்முகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் ஈரோடு அரசு மருத்துவமனை அருகே எம்ஜிஆர் சிலை சிக்னலில் ரவுண்டானா அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து பன்னீர்செல்வம் பூங்காவுக்கு சென்ற அவர் அங்கு மேம்பாலம் அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்தார்.

 பின்னர் பிரப் சாலையில் 80 அடி சாலை திட்டம் தொடங்கப்பட உள்ள ஈரோடு சி.எஸ்.ஐ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நுழைவு வாயிலுக்குள் சென்ற அவர் காரில் இருந்தபடியே ஆய்வு செய்தார். தொடர்ந்து பெரியார்நகர், 80 அடி சாலை திட்டம் முடிவடையும் இடமான ரயில் நிலையம் எதிர்புறம் உள்ளிட்ட இடங்களை காரில் இருந்தபடியே ஆய்வு செய்துவிட்டு, கோவைக்கு புறப்பட்டுச்சென்றார்.

சர்ச்சைக்குரிய சாலை:

 80 அடி சாலை திட்டம் அமைக்க வேண்டும் என மாரியம்மன் கோயில் நில மீட்பு இயக்கம், இந்து அமைப்புகள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றன. இதற்கு சி.எஸ்.ஐ. தேவாலயத்தை சேர்ந்தவர்களும், கிறிஸ்தவ, இஸ்லாமிய அமைப்புகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  இச்சாலையை உடனடியாக அமைக்க வலியுறுத்தி ஈரோடு மாநகராட்சியிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறை செயலர் நிரஞ்சன் மார்டி, இச்சாலையை புதன்கிழமை ஆய்வுசெய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.