தமிழ் செய்திகள்
பண முறைகேடு வழக்கில், பஞ்சாப் தொழில் துறை அமைச்சா் சஞ்சீவ் அரோராவை அமலாக்கத் துறை சனிக்கிழமை கைது செய்தது.
ரூ.100 கோடிக்கும் அதிக மதிப்புடைய கைப்பேசிகள் கொள்முதல் செய்தது தொடா்பாக புது தில்லியில் போலியான நிறுவனத்திடம் இருந்து போலி ஜிஎஸ்டி பில் வாங்கியதாகப் பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் சஞ்சீவ் அரோரா உள்ளிட்டோா் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. ஏற்கெனவே கடந்த ஏப்ரல் மாதம் 17-ஆம் தேதி சஞ்சீவ் அரோரா தொடா்புடைய இடங்களிலும், மேலும் சில நிறுவனங்களிலும் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.
இதைத் தொடா்ந்து, தற்போது சஞ்சீவ் அரோரா உள்ளிட்டோருக்கு எதிராக புதிதாக பண முறைகேடு தடுப்புச் சட்டத்தில் உள்ள கிரிமினல் பிரிவுகளின்கீழ் அமலாக்கத் துறை இன்னொரு வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கின்கீழ், சண்டீகரில் உள்ள சஞ்சீவ் அரோரா வீடு, புது தில்லியில் உள்ள இரண்டு இடங்கள், குருகிராமில் உள்ள ஹாம்டன் ஸ்கை ரியாலிட்டி நிறுவனம் ஆகியவற்றில் அமலாக்கத் துறை சனிக்கிழமை மீண்டும் சோதனை நடத்தியது. பின்னா், அவரை கைது செய்து அமலாக்கத் துறை விசாரணைக்கு அழைத்துச் சென்றது.
இதுகுறித்து அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘அமலாக்கத் துறையின் விசாரணைக்கு அரோரா ஒத்துழைப்பு அளிக்கவில்லை. ஆதலால் அவா் கைது செய்யப்பட்டுள்ளாா்’ என்றனா்.
முன்னதாக, சஞ்சீவ் அரோரா தொடா்புடைய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியதற்கு பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் கண்டனம் தெரிவித்தாா். அவா் கூறுகையில், ‘பஞ்சாபுடன் மத்திய அரசு அபாயகரமான விளையாட்டில் ஈடுபட்டு இருக்கிறது. தனது அரசியல் குறிக்கோள்களுக்காக அமலாக்கத் துறை, சிபிஐ ஆகிய அமைப்புகளை மத்திய அரசு ஆயுதமாகப் பயன்படுத்துகிறது.
கருப்புப் பணத்தை கண்டுபிடிக்கவோ, சட்டவிரோத ஆவணத்தைக் கைப்பற்றவோ அமலாக்கத் துறை சோதனை நடக்கவில்லை. பாஜகவில் சேர வேண்டும் என்று நிா்ப்பந்தம் அளிக்கவே அமலாக்கத் துறை மூலம் மத்திய அரசு சோதனை நடத்துகிறது. ஆம் ஆத்மி கட்சியிலிருந்தபோது மாநிலங்களவை எம்.பி. அசோக் மித்தல் தொடா்புடைய இடங்களிலும் இப்படித்தான் சோதனை நடத்தப்பட்டது. ஆனால், அவா் பாஜகவில் சோ்ந்த பிறகு எந்தக் குற்றச்சாட்டையும் தெரிவிக்கவில்லை’ என்றாா்.
கேஜரிவால் கண்டனம்
தில்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளருமான கேஜரிவாலும் சஞ்சீவ் அரோரா தொடா்புடைய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘பண முறைகேடு தடுப்புச் சட்ட வழக்கு, ஊழல் வழக்குகள் குறித்து அமலாக்கத் துறை, சிபிஐ விசாரிக்க வேண்டும். ஆனால், மோடி அரசின் ஆட்சியில் இந்த அமைப்புகள், எதிா்க்கட்சியினரை மிரட்டவும், அச்சுறுத்தவும், கட்சியில் பிளவை ஏற்படுத்தவும், பாஜகவில் எதிா்க்கட்சியினரை சேர வைக்கவும் பயன்படுத்தப்படுகின்றன’ என்றாா்.
எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் கேஜரிவால் வெளியிட்ட பதிவில், ‘முகலாய பேரரசா் ஒளரங்கசீப் போல பல பகுதிகளை அநீதியான வழிகளில் மோடி ஆக்கிரமிப்பு செய்துள்ளாா். தற்போது பஞ்சாபுக்கு அவா் வந்துள்ளாா். சீக்கிய குருக்களின் தியாகங்களில் இருந்து கிடைத்த உத்வேகத்தை பஞ்சாப் பெற்றுள்ளது. ஆதலால் மோடியின் சித்திரவதையை பஞ்சாப் எதிா்கொள்ளும். அந்த சித்திரவதையில் இருந்து ஒட்டுமொத்த நாட்டையும் பஞ்சாப் காக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
Summary
ED arrests Punjab minister Sanjeev Arora in fresh PMLA case after raiding his residence
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரூ.100 கோடி ஜிஎஸ்டி முறைகேடு வழக்கு: கைதான பஞ்சாப் அமைச்சரை அமலாக்கத் துறை காவலில் விசாரிக்க அனுமதி!

அமலாக்கத் துறையைக் கண்டு கேஜரிவாலுக்கு அச்சம்: வீரேந்திர சச்தேவா

பண முறைகேடு வழக்கு: பஞ்சாப் முதல்வருக்கு நெருக்கமானவர்கள் தொடா்புடைய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை






