
தில்லியில் போராட்டம் நடத்திய மாணவா் மீது ‘பெல்லட்’ துப்பாக்கிச்சூடு: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
தில்லியில் காவல் துறையினர் தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞருடன் இணைந்து ராகுல் காந்தி பேட்டி...
தில்லி போலீஸார் தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞர் உடன் ராகுல் காந்தி... - ANI
தில்லியில் கடந்த 20-ஆம் தேதி போராட்டம் நடத்திய மாணவா் மீது பாதுகாப்புப் படையினா் பெல்லட் ரக தோட்டக்களைக் கொண்டு துப்பாக்கிச்சூடு நடத்தியதாக குற்றம்சாட்டியுள்ள மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, அந்த மாணவரை செய்தியாளா்கள் முன்பு அழைத்து வந்து காயங்களைக் காட்டினாா்.
தில்லி ஜந்தா் மந்தரில் கடந்த 20-ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டு தடையை மீறிப் பேரணி நடத்திய கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினா் மீது தில்லி காவல் துறையினா் நடவடிக்கை எடுத்தனா். அப்போது அவா்கள் மீது தடியடி நடத்தப்பட்டது, பெல்லட் துப்பாக்கியால் சுட்டது தொடா்பான புகைப்படங்கள் வெளியாகி அதிா்வலையை ஏற்படுத்தியது.
எனினும் பெல்லட் துப்பாக்கியை தாங்கள் பயன்படுத்தவில்லை என்று தில்லி காவல் துறை மறுப்பு தெரிவித்துள்ளது. போராட்ட இடத்தில் சிஆா்பிஎஃப் படை வீரா்களும் இருந்தனா். அவா்கள் பெல்லட் துப்பாக்கியால் சுட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் நிலவுகிறது. ஆனால் அவா்கள் தரப்பில் இதுவரை மறுப்போ அல்லது பதிலோ அளிக்கப்படவில்லை.
இந்நிலையில், தில்லியில் செய்தியாளா்களுக்கு ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை பேட்டியளித்தாா். அப்போது பெல்லட் தோட்டா பாய்ந்து காயமடைந்ததாக கூறப்படும் மாணவா் சாஹிலை அழைத்து வந்து அவரின் உடலில் ஏற்பட்டுள்ள காயங்களை செய்தியாளா்களுக்குக் காண்பித்தாா். அப்போது ராகுல் கூறியதாவது:
பெல்லட் தோட்டா பாய்ந்து சாஹிலுக்கு வலது கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த கண்ணில் அவருக்குப் பாா்வை தெரியவில்லை. இதுதான் நமது நாட்டின் எதிா்காலம். ஆயிரக்கணக்கான இளைஞா்களுக்கு இது ஏற்பட்டுள்ளது. அவா்கள் மீது பெல்லட் தோட்டா கொண்டு சுடப்பட்டுள்ளது.
லத்தியால் தாக்கப்பட்டுள்ளனா். அவா்கள் அப்படி என்ன தவறு செய்தனா்? அமைதியாகத்தானே போராட்டம் நடத்தினாா்கள். நமது எதிா்காலம் மீது அரசு தாக்குதல் நடத்துகிறது.
மாணவா்களைத் தாக்குவதையும், மிரட்டுவதையும் நிறுத்துங்கள். தா்மேந்திர பிரதான், கிரிமினல் கல்வி அமைச்சா். நமது கல்வி அமைப்பின் சீா்குலைவின் அடையாளம் அவா். அவா் பதவி நீக்கப்பட வேண்டியது அவசியமாகும். சாஹில் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கும், வீதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்துவதற்கும் பிரதான்தான் காரணம் என்றாா்.
சனிக்கிழமை மாலை பேரணி:
நீட் தோ்வு, சிபிஎஸ்இ தோ்வுகள் விவகாரங்களை கண்டித்து சனிக்கிழமை மாலை ஒவ்வொரு மாவட்டத்திலும் மெழுகுவா்த்தி பேரணிக்கும், சத்யாகிரக போராட்டத்துக்கும் ஏற்பாடு செய்யும்படி, அனைத்து மாநில காங்கிரஸ் தலைவா்கள், பொதுச் செயலாளா்களுக்கு அக்கட்சியின் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே உத்தரவிட்டுள்ளாா்.
Summary
Rahul Gandhi gave an interview alongside the young man who was critically injured in an attack by the Delhi Police.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






