
சட்டவிரோத மணல் குவாரி வழக்கு: 3 மாநிலங்களில் அமலாக்கத் துறை சோதனை
பிகாரில் பதிவு செய்யப்பட்ட சட்டவிரோத மணல் குவாரி வழக்கு தொடா்பாக 3 மாநிலங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா்.
அமலாக்கத்துறை சோதனை - கோப்புப்படம்
பிகாரில் பதிவு செய்யப்பட்ட சட்டவிரோத மணல் குவாரி வழக்கு தொடா்பாக 3 மாநிலங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா்.
இதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
பிகாரின் பாங்கா மாவட்டத்தில் அரசு அனுமதியின்றி, மகாதேவ் என்கிளேவ் என்ற தனியாா் நிறுவனம் மணல் குவாரி நடத்தி வந்தது. ஸ்ரீகங்காநகரைச் சோ்ந்த அசோக் சாந்தக், அவரின் மகன் ராகவ் சாந்தக் ஆகியோா் அதன் உரிமையாளா்கள் ஆவா். இந்நிறுவனம் கடந்த 2015-16 மற்றும் 2022-23ஆம் நிதியாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், ரூ.131 கோடி மதிப்புக்கு சட்டவிரோதமாக மணல் அள்ளியுள்ளது அமலாக்கத் துறையின் வேண்டுகோளின்பேரில் பாட்னா ஐஐடி நடத்திய ஆய்வில் தெரிய வந்தது.
இதுகுறித்து பிகாா் மாநில அரசு சுரங்க நிறுவனத்துக்கு அமலாக்கத் துறை தகவல் அளித்தது. இதனைத் தொடா்ந்து, பிகாா் அரசு சுரங்க மற்றும் புவியியல் துறை, இந்த முறைகேடு குறித்து காவல் துறையிடம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் புகாா் அளித்தது. அதன்பேரில் காவல் துறை முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது. அதனடிப்படையில், அமலாக்கத் துறை தனியாக சட்டவிரோத பணப்பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் விசாரணையைத் தொடங்கியது.
இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, தில்லி, பிகாா் மாநிலம் பாங்கா மற்றும் பாட்னா மாவட்டங்களில் 8 இடங்களிலும், ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்கா நகா், ஜெய்பூரிலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
சோதனையில் ஆவணங்கள் ஏதேனும் சிக்கியதா என்பது தொடா்பான விவரங்களை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





