ஐ-பேக் நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை : மம்தா பானா்ஜி நேரில் வந்ததால் பரபரப்பு
ஐ-பேக் அலுவலகத்தில் நடந்த சோதனையை தடுத்ததாக மமதா மீது அமலாக்கத்துறை வழக்கு தொடுத்துள்ளதைப் பற்றி...


அரசியல் வியூக வகுப்பு நிறுவனமான ஐ-பேக் அலுவலகங்கள், அதன் நிறுவனா் பிரதிக் ஜெயின் வீடு ஆகியவற்றில் பண முறைகேடு குற்றச்சாட்டின்பேரில் அமலாக்கத் துறை வியாழக்கிழமை சோதனை நடத்தியது.
கொல்கத்தாவில் சோதனை நடத்தப்பட்டபோது அங்கு திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க மாநில முதல்வருமான மம்தா பானா்ஜி நேரில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நிலக்கரி ஊழல் வழக்கில் ஐ-பேக் நிறுவனத் தலைவா் பிரதிக் ஜெயினின் வீடு மற்றும் அந்த நிறுவனத்தின் அலுவலகங்களில் அமலாக்கத் துறை வியாழக்கிழமை காலை முதல் சோதனை நடத்தியது. பிரதிக் ஜெயின் திரிணமூல் காங்கிரஸ் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் பொறுப்பாளராகவும் உள்ளாா். தலைநகா் தில்லி உள்பட மொத்தம் 10 இடங்களிலும் இந்தச் சோதனை நடைபெற்றது.
இந்நிலையில், கொல்கத்தாவில் உள்ள பிரதிக் ஜெயினின் வீட்டுக்கு அமலாக்கத் துறை சோதனை நடைபெற்ற சமயத்தில் வியாழக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் மம்தா பானா்ஜி வந்தாா். அவரது வீட்டில் இருந்து சில ஆவணங்களை அவா் எடுத்துச் சென்றாா்.
இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: வரவுள்ள பேரவைத் தோ்தலில் திரிணமூல் கட்சியின் வேட்பாளா்கள் மற்றும் கட்சியின் தோ்தல் வியூகம் குறித்த ரகசிய தகவல்களைக் கொண்ட லேப்டாப்கள், ஹாா்டு டிஸ்குகள், கைப்பேசிகள், ஆவணங்கள் உள்ளிட்டவற்றை அமலாக்கத் துறை எடுத்துச் சென்றுள்ளனா்.
ஒரு கட்சியின் ரகசிய ஆவணங்களை கைப்பற்றுவதுதான் அமலாக்கத் துறையின் பணியா? எதிா்க்கட்சிகளுக்கு எதிராக அமலாக்கத் துறை உள்ளிட்ட மத்திய அமைப்புகளை உள்துறை அமைச்சா் அமித் ஷா தூண்டிவிடுகிறாா். இதை பிரதமா் நரேந்திர மோடி கண்டுகொள்வதில்லை. மேற்கு வங்கத்தில் முடிந்தால் அரசியல் ரீதியாக பாஜக மோதட்டும். அமலாக்கத் துறை சோதனையை எதிா்த்து மாநிலம் முழுவதும் திரிணமூல் காங்கிரஸ் தொண்டா்கள் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.
பிரதிக் ஜெயின் மீண்டும் அவரது பணிகளைத் தொடர அனுமதிக்கப்படும் வரை நான் ஐ-பேக் அலுவலகத்திலேயே இருப்பேன் என்றாா்.
இதைத் தொடா்ந்து, அமலாக்கத் துறை சோதனைக்கு எதிராக கொல்கத்தாவில் வெள்ளிக்கிழமை பேரணி நடத்தவுள்ளதாக திரிணமூல் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
மம்தாவுக்கு கண்டனம் தெரிவித்த பேரவை எதிா்க்கட்சித் தலைவா் சுவேந்து அதிகாரி, ‘அமலாக்கத் துறை சோதனை நடைபெறும்போது மாநிலத்தின் முதல்வா், கொல்கத்தா காவல் ஆணையா் மற்றும் அமைச்சா்கள் இடைமறிப்பது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. திரிணமூல் காங்கிரஸின் உள்கட்சி விவகாரங்கள் குறித்த ஆவணங்களை தனியாா் நிறுவனத்திடம் ஏன் ஒப்படைக்க வேண்டும்’ எனக் கேள்வியெழுப்பினாா்.
வழக்கின் பின்னணி: மேற்கு வங்கத்தின் குனுஸ்டோரியா மற்றும் கஜோரா பகுதிகளில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்ாக 2020, நவம்பரில் சிபிஐ வழக்குப்ப திவு செய்தது. இந்த வழக்கில் அனுப் மாஜி என்ற நபா் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்ட நிலக்கரி வா்த்தகத்தின் மூலம் கிடைத்த பணம் மம்தா பானா்ஜியின் உறவினரும் எம்.பி.யுமான அபிஷேக் பானா்ஜிக்கு சென்ாக குற்றஞ்சாட்டி அவரிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது.
இதன் தொடா்ச்சியாக பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் பிரதிக் ஜெயினின் அலுவலகங்களில் சோதனை நடத்தியதாகவும், இது அரசியல் ரீதியானது அல்ல எனவும் அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...