பயங்கரவாத அச்சுறுத்தல்: தில்லியில் மத, பாரம்பரிய தளங்களில் பாதுகாப்பு அதிகரிப்புபிளஸ் 2: தனித் தோ்வா்களுக்கான அனுமதிச்சீட்டு நாளை வெளியீடு!4 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!வேலூரில் விஜய் நிா்வாகிகள் சந்திப்பு கூட்டம்: 4,900 போ் பங்கேற்பு!டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

முதல்முறையாக பாஜக - காங்கிரஸ் கூட்டணி! எங்கே? என்ன நடந்தது?

மகாராஷ்டிரத்தில் பாஜக - காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது பற்றி...

News image
பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி - PTI
Updated On :7 ஜனவரி 2026, 1:54 pm

இணையதளச் செய்திப் பிரிவு

பாஜக - காங்கிரஸ் கூட்டணி: மகாராஷ்டிர மாநிலம் அம்பர்நாத் நகராட்சி தலைவர் பதவியைக் கைப்பற்றுவதற்காக காங்கிரஸுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் கூட்டணியே அமைக்காத இரு கட்சிகள் என்றால் பாஜக - காங்கிரஸ் என்று அனைவரும் எளிதில் கூறிவிடுவார்கள். ஆனால், மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் அரசியலில் நிரந்திர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை என்பதை நிரூபித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருகின்றது. இந்த உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வந்ததில் இருந்தே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனைக்கும் பாஜகவிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால், பல்வேறு இடங்களில் பாஜகவும், சிவசேனையும் நேருக்குநேர் மோதின.

இந்த நிலையில், ஏக்நாத் ஷிண்டே மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டேவின் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட தாணே மாவட்டத்தின் அம்பர்நாத் நகராட்சிக்கான தேர்தல் கடந்த டிசம்பர் 20 ஆம் தேதி நடைபெற்றது. இந்த நகராட்சியில் பாஜக - ஏக்நாத் ஷிண்டே சிவசேனைக்கு இடையே உடன்பாடு எட்டப்படாத நிலையில், இரு கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டன.

மொத்தமுள்ள 60 இடங்களில் நகராட்சித் தலைவர் பதவியைப் பெற 31 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால், சிவசேனை 27 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. பாஜக 14, காங்கிரஸ் 12, தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) 4, சுயேச்சை 2 இடங்களில் வெற்றி பெற்றிருந்தன.

நகராட்சித் தலைவர் பதவிக்கு பாஜக தேஜஸ்ரீ கரஞ்சுலேயும், சிவசேனை மனிஷா வாலேகரையும் வேட்பாளராக அறிவித்தது.

இந்த நிலையில், பாஜக வேட்பாளருக்கு காங்கிரஸின் 12, தேசியவாத காங்கிரஸின் (அஜித் பவார்) 4, ஒரு சுயேச்சை உறுப்பினர்கள் ஆதரவளித்துள்ளனர். இதன்மூலம் 31 உறுப்பினர்கள் ஆதரவுடன் பாஜகவின் தேஜஸ்ரீ கரஞ்சுலே நகராட்சித் தலைவராகவுள்ளார்.

இதன்மூலம் 25 ஆண்டுகாலமாக சிவசேனையின் கோட்டையாக இருந்த அம்பர்நாத் நகராட்சியை அக்கட்சி இழந்துள்ளது.

இதனிடையே, பாஜக - காங்கிரஸ் கூட்டணிக்கு அம்பர்நாத் விகாஸ் அகாடி எனப் பெயரிட்டுள்ளதாக தாணே மாவட்ட ஆட்சியருக்கு பாஜக எழுதியுள்ள கடிதம் வெளியாகியுள்ளது.

தாணே பாஜக தரப்பில் மாவட்ட ஆட்சியருக்கு எழுதிய கடிதம்.

தாணே பாஜக தரப்பில் மாவட்ட ஆட்சியருக்கு எழுதிய கடிதம்.

காங்கிரஸ் - பாஜக கூட்டணியை விமர்சித்த சிவசேனை எம்.எல்.ஏ. பாலாஜி கினிகர், “புனிதமற்ற, சந்தர்ப்பவாதக் கூட்டணியை அமைத்துள்ளனர். ஒருபுறம், தேசிய அளவில் 'காங்கிரஸ் இல்லாத பாரதம்' என்ற முழக்கங்களை பாஜக எழுப்புகிறது, மறுபுறம், அம்பர்நாத்தில் அதிகாரத்திற்காக அதே காங்கிரஸுடன் கூட்டணி வைக்கத் தயங்கவில்லை.” எனத் தெரிவித்தார்.

பாஜக நகரத் தலைவர் அபிஜித் கரஞ்சுலே அளித்துள்ள விளக்கத்தில், "கருத்தியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, நகரத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக பாஜக, காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மகாராஷ்டிரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனையை வீழ்த்துவதற்காக காங்கிரஸுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.