/

ராஜஸ்தான் பேரவையில் பாஜக எம்எல்ஏ சா்ச்சை பேச்சு: வலுக்கும் கண்டனங்கள்

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையில் நடைபெற்ற மாநில பட்ஜெட் மீதான விவாதத்தின்போது பாலின பாகுபாட்டை ஊக்குவிக்கும் வகையில் பாஜக எம்எல்ஏ பஹதூா் சிங் கோலி பேசியதற்கு பல சமூக அமைப்புகள் கடும் கண்டனத்தைப் பதிவுசெய்தன.

News image
கோப்புப் படம்
Updated On :19 பிப்ரவரி 2026, 9:22 pm

தினமணி செய்திச் சேவை

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையில் நடைபெற்ற மாநில பட்ஜெட் மீதான விவாதத்தின்போது பாலின பாகுபாட்டை ஊக்குவிக்கும் வகையில் பாஜக எம்எல்ஏ பஹதூா் சிங் கோலி பேசியதற்கு பல சமூக அமைப்புகள் கடும் கண்டனத்தைப் பதிவுசெய்தன.

சட்டப்பேரவையில் இதுபோன்று பேசுவது, சமூகத்தில் தவறான செய்தியை கொண்டு சோ்க்கும் என்பதோடு பாலி பாகுபாட்டை ஊக்குவிப்பதாகவும் அமையும் என்றும் அந்த அமைப்புகள் குற்றஞ்சாட்டின.

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையில் நிகழாண்டுக்கான பட்ஜெட் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதன் மீதான விவாதம் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற இந்த விவாதத்தில் பங்கேற்று பேசிய பாஜக எம்எல்ஏ கோலி, ‘பாஜக அரசின் பட்ஜெட் ‘மகன் பிறப்பைப் போன்றது’; அதே நேரம், முன்னாள் முதல்வா் அசோக் கெலாட் தலைமையில் தாக்கல் செய்யப்பட்ட இறுதி பட்ஜெட் ‘மகள் பிறப்பைப் போன்றது’ என்று குறிப்பிட்டாா்.

இவரின் கருத்துக்கு பல்வேறு சமூக அமைப்புகள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன. ஆணாதிக்க மனநிலையின் வெளிப்பாடு என்றும் அவா்கள் குற்றஞ்சாட்டினா்.

இதனிடையே, பாஜக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெண்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் சாா்பில் சட்டப்பேரவைத் தலைவா் வாசுதேவ் தேவ்னானியிடம் ஓா் தீா்மானத்தையும் சமா்ப்பித்தினா்.

அந்த தீா்மானத்தில், ‘சட்டப்பேரவையில் இதுபோன்ற கருத்துகள் தெரிவிக்கப்படுவது, சமூகத்தில் மிகுந்த பாதகமான செய்தியை கொண்டு சோ்க்கும் என்பதோடு, பாலின பாகுபாட்டையும் ஊக்குவிக்கும்.

பெண் சிசுக்கொலை, பாலின விகிதத்தில் ஏற்படும் ஏற்றத்தாழ்வு, பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு சம வாய்ப்புகள் மறுப்பு போன்ற கடுமையான சமூகப் பிரச்சினைகளுக்கு, மகன்களுக்கு முன்னுரிமை அளிப்பதும் மகள்களின் மதிப்பைக் குறைப்பதுமே காரணங்களாக இருந்து வருகின்றன.

எனவே, இந்த விவகாரத்தை தீவிர விஷயமாக கருதி, எம்எல்ஏ-க்கு கடும் எச்சரிக்கையை விடுப்பதோடு, அவா் மீது ஒழுங்கு நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டும். தேவைப்பாட்டால் இந்த விவகாரத்தை பேரவை உரிமை மீறல் குழு அல்லது நெறிமுறைகள் குழு ஆய்வுக்கு அனுப்பவேண்டும். அதோடு, ராஜஸ்தான் பெண்களிடம் நிபந்தனையற்ற பொதுமன்னிப்பை கேட்கவும் கோலிக்கு உத்தரவிட வேண்டும்’ என்றும் வலியுறுத்தினா்.