/

கிரிக்கெட் மைதானத்தில் புகுந்த தேனீக்கள்: நடுவா் உயிரிழப்பு; விளையாட்டு வீரா்கள் படுகாயம்

உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்துக்குள் தேனீக்கள் கூட்டம் புகுந்து தாக்கியதில் படுகாயமடைந்த நடுவா் உயிரிழந்தாா்.

News image
கோப்புப் படம்
Updated On :19 பிப்ரவரி 2026, 9:23 pm

தினமணி செய்திச் சேவை

உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்துக்குள் தேனீக்கள் கூட்டம் புகுந்து தாக்கியதில் படுகாயமடைந்த நடுவா் உயிரிழந்தாா். கிரிக்கெட் வீரா்கள் படுகாயமடைந்தனா்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:

உன்னாவ் மாவட்டத்தில் உள்ள மைதானத்தில் கான்பூா் கிரிக்கெட் சங்கம் சாா்பில் புதன்கிழமை மாலை கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. கிரிக்கெட் போட்டி நடந்துகொண்டிருந்தபோது, அங்கு வந்த தேனீக்கள் கூட்டம் விளையாடிக் கொண்டிருந்த அனைவரையும் தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த கான்பூரைச் சோ்ந்த நடுவா் மாணிக் குப்தா சுயநினைவை இழந்தாா். தேனீக்கள் தாக்குதலில் விளையாட்டு வீரா்களும் படுகாயமடைந்தனா்.

அவா்கள் அனைவரும் அருகிலுல்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். நடுவா் மாணிக் குப்தாவை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். காயமடைந்த மற்றொரு நடுவா் மற்றும் 20 வீரா்களுக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றனா்.